செவ்வாய், 30 நவம்பர், 2010

இலங்கையால் தேடப்பட்ட சந்தேக நபர் இந்தியாவில் கைது: இலங்கைக்கு எதிரானவர்களும் இனி கைது செய்யப்படலாம்

இலங்கையில் இடம்பெற்ற வற் மோசடி தொடர்பில் சில வருடங்களாக தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற நிதி மோசடிகளில் வற் வரி மோசடியும் மிகப் பெ ரியதொரு மோசடியாகும். கடந்த 200-2004 வரையான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குறித்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இப்போதைக்கு ஒருமாத காலத்துக்கு முன் இந்திய மற்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் மத்தியில் ஒரு இரகசிய உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இலங்கைக்கு எதிரான அரசியல், ஊடகச் செயற்பாடுகளுக்கு இந்தியாவைத் தளமாகப் பயன்படுத்த எவருக்கும் அனுமதியளிப்பதில்லையென இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கைக்கு எதிரான ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தனி நபர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தொடுக்கப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் ஆகிய எத்தரப்பினராயினும் இந்தியாவில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்து நாடு கடத்த இந்தியாவின் புலனாய்வுத்துறை உறுதியளித்திருந்தது.
அது தொடர்பான செய்தியொன்று ஏலவே தமிழ் வின்னிலும் வெளியாகியிருந்தது.
அவ்வாறான பின்புலத்திலேயே இந்தியாவில் தங்கியிருந்த வற் மோசடி சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இன்னும் பலர் அவ்வாறு கைது செய்யப்படலாம் என்று தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை: