புதன், 4 ஆகஸ்ட், 2010

சினிமாவுக்கு முழுக்கா? - நயன்தாரா ஆவேசம்

நான் சினிமாவிலிருந்து விலகப் போவதாக சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. விரைவில் 3 புதிய படங்களில் நடிக்கப் போகிறேன், என்றார் நடிகை நயன்தாரா.

ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்து வந்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தை வாசன் விசுவல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரித்து வந்தார். ராஜேஷ் எம் இயக்குகிறார்.

இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு [^], சென்னை திரிசூலத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்தது. ஆர்யா-நயன்தாரா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் படமாக்கிக்கொண்டிருந்தார்.

கடைசி ஷாட் படமாகி முடிந்ததும், படக்குழுவினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். உடனே ஒரு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது. அந்த கேக்கை ஆர்யா வெட்ட, அனைவரும் கைதட்டினார்கள்.

பின்னர் படத்தின் தயாரிப்பாளர் கேஎஸ் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பாஸ் என்ற பாஸ்கரன்' படம் மிக நன்றாக வந்து இருக்கிறது. திட்டமிட்டபடி, டைரக்டர் ராஜேஷ் 65 நாட்களில் இந்த படத்தை முடித்துக் கொடுத்து இருக்கிறார். பொதுவாக ஒரு படத்தை ஆரம்பிக்கும்போது படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் நட்பும், மரியாதையும் படம் முடியும்போது இருக்காது.

ஆனால் நானும், ராஜேசும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசுகிற அளவுக்கு, இந்த படத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. முழு படத்தையும் பார்த்த ஆர்யா, 'இந்த படத்தை எனக்கு கொடுத்து விடுங்கள்' என்று தனது ஷோ பீப்பிள் நிறுவனத்துக்காக வாங்கி விட்டார். ஆர்யாவிடம் இருந்து இன்னும் அதிக விலை கொடுத்து, ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்காக உதயநிதி ஸ்டாலின் [^] வாங்கி இருக்கிறார்...,'' என்றார்.

காதல் திருமணமா?

பின்னர் படத்தின் நாயகன் ஆர்யா பேசுகையில், "பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக வருகிறேன். நயன்தாரா, கல்லூரி மாணவியாக வருகிறார். படத்தில், நெருக்கமான காதல் காட்சிகள் உண்டு. ஆனால், முத்த காட்சி கிடையாது.

இந்த படம் என் அந்தஸ்தை மேலும் ஒரு படி உயர்த்தும் என நம்புகிறேன். அந்த அளவு அருமையான ஸ்கிரிப்ட்.

'மதராச பட்டினம்' படத்தில், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் பார்த்துவிட்டு, இயக்குநர் [^] பாலா என்னை பாராட்டினார். அந்த படத்தின் கதாநாயகி எமி படக்குழுவினர் அனைவரின் முன்னிலையில், 'உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...இந்த ஊர் பிடிச்சிருக்கு' என்று என்னிடம் கூறியதால், எனக்கும் அவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். எமி உள்பட எந்த கதாநாயகியுடனும் எனக்கு காதல் இல்லை.

திருமணம் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. காதல் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது... பார்க்கலாம்", என்றார்.

நயன்தாரா ஆவேசம்!

பின்னர் நயன்தாராவை பேசுமாறு கேட்டுக் கொண்டனர். முதலில் சற்று அமைதியாக இருந்தவர், இப்படிக் கூறினார்:

"நான், சினிமாவை விட்டு விலகப்போவதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதில், உண்மை இல்லை. தொடர்ந்து நடிப்பேன். 2 தெலுங்கு படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அந்த படங்களை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பேன். இதுபோன்ற வதந்திகளை நிறையவே பார்த்துவிட்டேன். பத்திரிகைகள் எனக்கு நிறைய முறை திருமணம் செய்து பார்த்துவிட்டன. எனவே வதந்திகளுக்கு நான் கவலைப்படுவதில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை: