ஞாயிறு, 10 ஜனவரி, 2021

பொள்ளாச்சி: கனிமொழி தடுக்கப்பட்டபோது நடந்தது என்ன?

minnambalam: ொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இன்று (ஜனவரி 10) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்காக கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்தக் கனிமொழி எம்.பி. இன்று (ஜனவரி 10) காலை சென்று கொண்டிருந்தார். ஈச்சனாரி அருகே கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி பொள்ளாச்சி செல்ல அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி. உட்பட திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். அடுத்த சில நிமிடங்களில் போலீஸின் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தப் புறப்பட்டுச் சென்றார் கனிமொழி. 

இடையில் என்ன நடந்தது என்பதை இன்று (ஜனவரி 10) சென்னை ராயபுரத்தில் நடந்த மக்கள் வார்டு சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

“பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும், வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லி, இன்றைக்கு நம்முடைய மகளிர் அணியின் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கி, நடத்தப்படும் என்று அறிவித்தோம்.

அதன்படி அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக, கனிமொழி அவர்கள் காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து, அந்தக் கூட்டத்திற்குப் போகும் போது காவல்துறையினர் தடுத்து விட்டார்கள்.

அதுமட்டுமின்றி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பல இடங்களிலிருந்து நிறைய மகளிர் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

அவ்வாறு போராட்டம் நடந்தால், அ.தி.மு.க. அரசின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் அல்லவா? அதற்காகத் திட்டமிட்டு இதைத் தடுக்க முயற்சித்தார்கள்.

அப்பொழுது கனிமொழி அவர்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். இதேபோல, எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். தடுத்து நிறுத்தினால் அந்தத் தடையை மீறிச் செல்லுங்கள், கவலைப்படாதீர்கள் என்று நான் கூறினேன்.

அந்தத் தடையை மீறிச் சென்று விட்டார்கள். அப்பொழுதும் விடவில்லை. அதற்குப் பிறகு, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை அழைத்து, டி.ஜி.பி.யிடம் பேசச் சொன்னேன்.

’அனுமதி வழங்கவில்லை என்றால், நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மகளிரைத் திரட்டி எல்லா இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்தேன். அதுவும் நானே அந்தப் போராட்டத்திற்குச் செல்வேன்’ என்று கூறினேன்.

இந்த விஷயத்தை நான் டெலிபோனில் பேசினேன். ஏனென்றால் அப்போதுதான் இந்த விஷயம் ‘டேப்’ ஆகி, இந்தச் செய்தி உடனடியாக ஆளுங்கட்சிக்கு செல்லும் என்பது தெரியும். அவ்வாறே சென்றது.

உடனே அதற்கு அனுமதித்து, போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இவ்வளவு அநியாயமான, சர்வாதிகார ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது”என்று கனிமொழி ஆர்ப்பாட்டத்தின் தடையை எப்படி உடைத்தோமென்று விளக்கினார் ஸ்டாலின்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: