வியாழன், 14 ஜனவரி, 2021

பீகாரில் வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - அடையாளம் காட்டாமல் இருக்க கண்களை சிதைத்த கொடூரம்

maalaimalar.com : மதுபானி: பீகாரின் மதுபானி மாவட்டத்தில் காவாகா பார்கி கிராமத்தை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி, காதுகேளாத வாய்பேச முடியாத பாதிப்பு கொண்டவர். சம்பவத்தன்று அந்த சிறுமி தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு அழைத்து சென்றாா். அவருடன் வேறுசில சிறுவர்களும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அவளை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காம கொடூரர்கள், சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, சிறுமியின் கண்களை கூரிய ஆயுதத்தால் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவளுடன் சென்ற சிறுவர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து தகவல் கூறியதாக தெரிகிறது. உடனே அவளது பெற்றோர் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

வாய் பேச முடியாத சிறுமியை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவளது கண்ணை சேதப்படுத்தியதால் இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்களை சிறுமியால் அடையாளம் காட்ட முடியவில்லை. அவளது பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. அவள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

கருத்துகள் இல்லை: