புதன், 13 ஜனவரி, 2021

ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்கிறார். நாளை அவனியாபுரம்

minnambalam : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை ஜனவரி 14 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழாவில் கலந்துகொள்கிறார். இதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று சத்தியமூர்த்தி பவனில் அறிவித்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று, ‘ராகுலின் தமிழ் வணக்கம’ என்ற பெயரில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, பெருமை மிக்க விவசாயிகளின் சின்னமான காளையை அடக்குகிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பொங்கல் தினத்தன்று காலை 11 மணியளவில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 மணி நேரம் அங்கேயே செலவிடுகிறார்.

இந்த வருகையின் மூலமாக இந்தியா முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை தர இருக்கிறார். அது மட்டும் அல்ல, தமிழகத்தில் நடைபெறும் ஒரு மோசமான தரமற்ற, மத்திய அரசாங்கத்திற்கு தலைவணங்கி இருக்கின்ற இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்காக இந்த ஆட்சியின் தீமைகளை, தமிழகத்தின் வரி உரிமைகளை பறிகொடுக்கும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக ‘ராகுலின் தமிழ் வணக்கம்' கொடி கட்டி பறக்கும்” என்ற அழகிரியிடம்,

“ராகுல் வரும்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திப்பாரா?” என்ற கேள்விக்கு,

“ ராகுல் காந்தியின் இந்த வருகையின் போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அவர் வருகை தர இருக்கும் நிகழ்ச்சிகளில் தோழமை கட்சி தலைவர்களோடு அவர் பங்கு கொள்வார். பஞ்சாபில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூட , தமிழக மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். என் மனம் கவர்ந்த மக்கள் என்று கூறியுள்ளார்” என்று தெரிவித்தார் கே.எஸ். அழகிரி.

ஏற்கனவே ராகுல் காந்தியை தமிழகத்தில் நடக்க இருக்கும் விவசாயிகள் பேரணிக்கு தலைமை தாங்க அழகிரி அழைத்திருந்தார். ஆனால் அதற்கு முன்னரே பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டுத் திருவிழாவுக்கு அழைப்பு விடுத்தததும் உடனே ஒப்புக் கொண்டார் ராகுல் காந்தி.

அண்மையில் அழகிரியால் பரிந்துரை செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த ஒவ்வொரு நிர்வாகிக்கும் ராகுல் காந்தியிடமிருந்து தனிப்பட்ட முறையில் நேற்று மெசேஜ் வந்திருக்கிறது,

அதில், 'தமிழ் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு விழாவில் அவனியாபுரத்தில் உங்களுடன் கொண்டாடி மகிழ்ந்திட விழைந்துள்ளேன் -ராகுல் காந்தி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: