புதன், 20 மார்ச், 2019

முதல் லோக் பால்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

 முதல் லோக் பால்: குடியரசுத் தலைவர் உத்தரவு!மின்னம்பலம் : உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் பால், லோக் ஆயுக்தா ஆகிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆண்டுகள் கடந்தாலும், நாட்டில் முதன் முதலாக லோக் பால் ஆணையத்தை நேற்று (மார்ச் 19) இரவு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகே இந்த லோக் பால் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், சட்ட நிபுணர் ஆகியோர் கூடி லோக் பால் ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இந்த குழுவை அமைக்காமல் காலம் கடத்தியதால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து பத்து நாட்கள் மத்திய அரசுக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் விதித்ததை அடுத்து கடந்த 15 ஆம் தேதி லோக் பால் உறுப்பினர்களை முடிவு செய்யும் அவசரக் கூட்டம் நடந்தது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்க்கே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைக்கப்படாமல் சிறப்பு அழைப்பாளர் என்ற வகையில் அழைக்கப்பட்டார். அதையடுத்து அவர் இந்த அழைப்பை நிராகரித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
இவ்வாறு எதிர்க்கட்சியினர் பங்கேற்பு இல்லாமலேயே நடந்து முடிந்த அந்தக் கூட்டத்தை அடுத்து குடியரசுத் தலைவர் லோக் பால் குழுவை நேற்று அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் முதல் லோக் பால் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் திலீப் போஸ்லே, பி.கே. மொஹந்தி, அபிலாஷ் குமாரி, ஏ.கே. திரிபாதி ஆகிய ஓய்வுபெற்ற நீதிபதிகள் லோக் பால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதித் துறை அல்லாத உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், முன்னாள் மராட்டிய தலைமைச் செயலாளர் தினேஷ்குமார் ஜெயின், மகேந்திர சிங், ஐபி கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: