திங்கள், 18 மார்ச், 2019

ஆசிட் வீச்சு குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

மாலைமலர் : புதுடெல்லி: இமாசலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் மீது கடந்த 2004ம் ஆண்டு இரண்டு பேர் ஆசிட் வீசினர். இந்த தாக்குதலில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
 இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி குற்றவாளிகள் அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, அபராத தொகையை தலா ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக குறைக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதிக்க கோரி மாநில அரசு சார்பில் கடந்த 2008ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றவாளிகள் இருவரும் தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.

அபராத தொகையையும் அவர்கள் செலுத்திவிட்டனர். இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநில அரசு தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கன்வில்கர் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நாகரீகமற்ற, இதயமே இல்லாத குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். மாநில அரசும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: