வெள்ளி, 22 மார்ச், 2019

கடலூர் திமுக வேட்பாளர் ரமேஷ் ! .. சொந்தக் கட்சியினரிடமே அறிமுகம் இல்லாத வேட்பாளரை மக்களிடம் எப்படி அறிமுகம் செய்வது?

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: வெளிநடப்பு செய்த விசிக மா.செ!மின்னம்பலம் : நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஒரு கட்சியில் ஒருவருக்குத்தான் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுராந்தகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் சொந்த ஊர் நெல்லிக்குப்பம், கடலூர் தொகுதியில் வருவதால் அழைப்பு இல்லாமலேயே கலந்துகொண்டு பேசிய அவர், “வேட்பாளர் ரமேஷை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எனக்கும் அவரைத் தெரியாது, அவருக்கும் என்னைத் தெரியாது, இருந்தாலும் தலைமை அறிவிப்பை ஏற்று நாம் வெற்றிபெற உழைக்க வேண்டும்” என்றார்.
விசிக சார்பில் மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தனும், அக்கட்சியைச் சேர்ந்த கடலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வனும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தாமரைச்செல்வன், “விசிகவும் தவாகவும் சேர்ந்து இந்தத் தேர்தலில் மாம்பழத்தை நசுக்கி பிழிந்திடுவோம்” என்று கூறினார்.
தாமரைச்செல்வனுக்குப் பேச அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளரான முல்லைவேந்தனுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முல்லைவேந்தன், எனக்கு முக்கியத்துவம் இல்லாதபோது நான் ஏன் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

வெளிநடப்பு செய்தது பற்றி விசிக மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தனிடம் கேட்டோம், “மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னை பேச அனுமதிக்காமல் வேறு சிலரை பேச வைக்கிறார்கள். திமுக வேட்பாளரைப் பற்றி நாங்கள் குறை சொல்லக்கூடாது. வேட்பாளர் என்ற முறையில் மாவட்டச் செயலாளரான என்னை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால் யாரோ எனக்கு போன் செய்து உங்களைப் பார்க்க வேட்பாளர் வருகிறார், ரோட்டில் வந்து நில்லுங்கள் என்கிறார். இது எப்படி சரியாக இருக்கும்?” என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரிந்துரையால் முந்திரி வியாபாரியான ரமேஷுக்கு சீட் கிடைத்துள்ளது. அவருக்குத் தேர்தல் வேலைகள், அதன் சிரமம் எதுவும் தெரியாது. கட்சி நிகழ்ச்சிகள், கட்சி மேடையேறுவதுகூட இதுதான் முதன்முறை என்கிறார்கள் கடலூர் மாவட்ட திமுகவினர். சொந்தக் கட்சியினரிடமே அறிமுகம் இல்லாத வேட்பாளரை மக்களிடம் எப்படி அறிமுகம் செய்யப்போகிறோமோ என்ற புலம்பலும் கூட்டத்தில் பரவலாகவே இருந்தது
பாமக வேட்பாளர் அறிமுகம்
அதே நேரத்தில் கடலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், “பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் சமூகப் போராளி. பாமக எங்களோடு கூட்டணி வைத்தது எங்களுக்கும் கூட்டணிக்கும் பெரிய பலம்” என்று ராமதாஸைக் குளிரவைத்தார்.
ராமதாஸ் பேசும்போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமூகப் போராளி, தமிழக மக்களுக்கு ஏராளமான சலுகைகளைச் செய்துள்ளார். சத்துணவு திட்டத்தைக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர்தான். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டுவந்து ஏராளமான நன்மைகளை செய்துள்ளார்கள்” என்றவர், எங்கள் வேட்பாளரை வெற்றி பெறவைக்கும் முழு பொறுப்பையும் அமைச்சர் சம்பத்திடம் ஒப்படைக்கிறேன் என்றார்.
அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்துவந்த ராமதாஸ், இப்படி பேசுவதை கேட்ட அதிமுகவினரும் பாமகவினரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

கருத்துகள் இல்லை: