வியாழன், 21 மார்ச், 2019

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் பிறந்த நாள்

Isai Inban : பட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பேருடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதல்வர்
இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.
பல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.
“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.

“இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்..... ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம். அழகிரியின் வாழ்க்கையில் இப்படி நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்கள் எத்தனையோ

கருத்துகள் இல்லை: