புதன், 19 செப்டம்பர், 2018

தெலங்கான ஆணவக்கொலை கூலிப்படை ஷர்மா கைது . பிகார் மாநில பார்ப்பான்

ஆணவக் கொலை: குற்றவாளி கைது!மின்னம்பலம் : தெலங்கானா மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் பிரனய் ஆணவக் கொலைக்குப் பலியான விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட ஷர்மா எனும் கூலிப்படையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்த பெருமல்ல பிரனய்குமார் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 14) அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். மனைவி அம்ருதவர்ஷினி மற்றும் தாய் பிரேமலதா ஆகியோர் உடன் சென்றபோது, பின்பக்கமாக வந்த ஒரு நபர் அவரது கழுத்தில் கத்தியால் வெட்டினார். தலை மற்றும் கழுத்தில் கடுமையாகத் தாக்கியதால், சம்பவ இடத்திலேயே பிரனய் பலியானார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த மாலா எனும் சமூகத்தவரான பிரனய், கடந்த ஜனவரி மாதம் வேறு சமூகத்தவரான அம்ருதவர்ஷினியைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஹைதராபாத்திலுள்ள ஆரிய சமாஜத்தில் நடந்தது. சிறு வயதிலிருந்தே இவர்கள் இருவரும் காதலித்துவந்தனர். இந்தத் திருமணத்துக்கு, அம்ருதவர்ஷினியின் தந்தை மாருதி ராவ் எதிர்ப்பு தெரிவித்தார். மாருதி ராவ், மிர்யாலகுடா பகுதியில் பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். திருமணம் முடிந்த பின்னரும், அம்ருதவர்ஷினியையும் பிரனய்யையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
சமீபத்தில், அம்ருதவர்ஷினி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து மாருதி ராவிடம் தகவல் தெரிவித்தார். ஆனால், கருவைக் கலைக்கச் சொல்லி மாருதி ராவ் வற்புறுத்தியதாகவும், அதற்கு உடன்படாததால் பிரனய்யைத் தனது தந்தை கூலிப் படையினரை ஏவிக் கொலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் அம்ருதவர்ஷினி.
இந்த வழக்கில் மாருதி ராவ் மற்றும் அவரது சகோதரர் ஷ்ரவண் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நண்பர் அப்துல் கரீம் என்பவரும் கைதாகியுள்ளார். இந்தக் கொலையில் மறைமுகமாக மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியைத் தேடும் பணி நடந்துவந்தது.
இதன் அடிப்படையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான், பிரனய்யைப் பின்னால் இருந்து கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பிகாரில் கைது செய்யப்பட்ட ஷர்மா, தெலங்கானா மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அம்மாநில காவல் துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: