திங்கள், 17 செப்டம்பர், 2018

பெரியார் 140 நாட் அவுட்...

பெரியார்  140 நாட் அவுட்...மின்னம்பலம் :ராமசாமியாகப் பிறந்து, பகுத்தறிவுப் பகலவனாக வாழ்ந்து, உடலால் மறைந்து, கொள்கையால் மறையாத பெரியாருக்கு இன்று 140ஆவது பிறந்த நாள். இன்னும் இன்னும் இந்தியக் கூட்டாட்சிக்கும், இந்திய மாநிலங்கள் முழுமைக்கும் தேவைப்படுகிறார் பெரியார்.
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. அங்கே அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தந்தை பெரியார் பிறந்த நாள் பெருவிழா நடைபெறுகிறது. இதை ஒட்டி 90 வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்குப் பாராட்டு, வாழ்த்து, பரிசளிப்பு விழா நடக்கிறது. சிறப்பு விருந்தினர்களாக திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பெரியார் திடலையும் தாண்டி பல்வேறு அமைப்புகளாலும், பல்வேறு கட்சிகளாலும், பல்வேறு தனி நபர்களாலும் பெரியார் இன்று கொண்டாடப்படுகிறார்.

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தலைநகர் டெல்லியிலும் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்பினரால் உணர்ச்சி மிகுதியுடன் கொண்டாடப்படுகிறது. பெரியார் பன்னாட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டைப் புரட்டிப் போட்ட பெரியார், இந்த 21ஆம் நூற்றாண்டுக்கும் ஒற்றைத் தேவையாக நிற்கிறார்.
அதனால்தான் பெரியார் 140 நாட் அவுட்

கருத்துகள் இல்லை: