புதன், 13 செப்டம்பர், 2017

படுமோசமான பொருளாதார சரிவை நோக்கி மோடி ஆட்சி ... எல்லா துறைகளிலும் கட்டுக்கு அடங்காத ஊழல்!

மின்னம்பலம் : பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்திலும் மத்தியில்
ஆளும் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது 'குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆட்சி' என்ற உத்தரவாதத்தை அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. தொழில் வாய்ப்பை உருவாக்குவதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8ஆம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையே உள்நாட்டு உற்பத்தி சரிந்ததற்கு முக்கியக் காரணமாகும். பணமதிப்பழிப்பு என்ற நடவடிக்கையின் பெயரில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தார் பிரதமர் மோடி. இதன்மூலம் புழக்கத்தில் இருந்த 86 சதவிகித பணம் தடை செய்யப்பட்டது. இதனால் பணியிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் கடுமையான அளவில் ஏற்பட்டது.

இந்த நடவடிக்கைக்குப் பின் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவிகிதமாக சரிந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான சரிவு இதுவாகும். இதற்கு முந்தைய காலாண்டில் (ஜனவரி - மார்ச்) உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவிகிதமாக இருந்தது. 2015-16ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்தது.
அதேபோல ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வேலையின்மை குறைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்குத் தொழிலாளர் சந்தையின் பொருளாதார மதிப்பு சரிந்துள்ளது. வேலையின்மை விகிதமும் 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாகத் தான் இருந்தது.
2017ஆம் ஆண்டுக்கான வியாபார தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 190 நாடுகளில் 130ஆவது இடம் என்ற மோசமான இடத்தையே பெற்றுள்ளது. அதேபோல 'மேக் இன் இந்தியா' திட்டமும் போதிய அளவில் வெற்றியடையவில்லை. இந்தத் திட்டம் போதுமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

கருத்துகள் இல்லை: