வியாழன், 14 செப்டம்பர், 2017

ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் .. .1,10,000 கோடியில் .88 ஆயிரம் கோடி ஜப்பான் கடன்

தினமலர் :ஆமதாபாத்: மகாராஷ்டிர மாநிலம், மும்பை முதல் குஜராத்தின்
ஆமதாபாத் நகர் வரையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் துவக்கி வைத்தனர்.புல்லட் ரயில் குறித்த சில சிறப்பு அம்சங்கள்: புல்லட் ரயிலானது மணிக்கு, 320 முதல் 350 கி.மீ., வேகத்தில் செல்லும். இதன் மூலம் தற்போது இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிக்க ஆகும் நேரம் 8 மணியிலிருந்து 2 மணி நேரமாக குறைகிறது. இதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படும்.
இதில் செல்ல விரும்பும் பயணிகள் 2 வகையான வேகங்களில் செல்லும் ரயிலில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
1. அதிவேக ரயில்: இந்த ரயிலானது இலக்கை 2.58 மணி நேரத்தில் சென்றடையும்.
2. மிக அதிவேக ரயில்: இந்த ரயிலானது இலக்கை 2.07 மணிநேரத்தில் சென்றடையும். தினமும் 1.6 கோடி பேர்: முதல்கட்டமாக, புல்லட் ரயிலில் 750 பயணிகள் பயணம் செய்யும் வகையில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து, 1,200 பேர் பயணிக்கும் வகையில், பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

முதல்கட்டமாக இந்த ரயிலில் வருடத்திற்கு 1.6 கோடி மக்கள் பயணிப்பார்கள் எனவும், 2050ல், தினமும் 1.6 லட்சம் பேர் இந்த ரயிலில் பயணிப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
< ரயில் நிலையங்கள்:< ஆமதாபாத் - மும்பை இடையிலான வழியில் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். மும்பை, தானே. விரார், போய்சர், வபி, பிலிமோரா, சூரத், பஹ்ரூச், வதோதரா, ஆனந்த், ஆமதாபாத், சபர்மதி ஆகிய நகரங்களில் இந்த ரயில் நிற்கும்.

வழி
புல்லட் ரயில் திட்டத்திற்காக 825 ஹெக்டேர் நிலம் கையகபடுத்தப்பட உள்ளது. இந்த ரயிலுக்காக போய்சர் முதல் மும்பையின் பிகேசி என்ற இடம் வரை சுமார் 21 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதில் 7 கி.மீ., கடலுக்கு அடியில் அமைகிறது. இது இந்தியாவின் நீண்ட ரயில் சுரங்க பாதையாக இருக்கும்.

கடன்:
இந்த ரயில் திட்டமானது 2023 டிசம்பருக்குள் நிறைவடையும் வகையில் முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது 2022 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கும் வகையில், மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆகும் ரூ.1,10,000 கோடியில் ரூ.88 ஆயிரம் கோடியை ஜப்பான் கடனாக வழங்குகிறது. இதற்கு வட்டி 0.1 சதவீதம் ஆகும். இந்த கடனை, 50 வருடங்களில் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்:
இந்த ரயில் திட்டம் அமலுக்கு வரும் போது 15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அரசு கூறியுள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்காக, அதிவேக ரயில் பயிற்சி மையம் சார்பில் 4 ஆயிரம் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஜப்பானும் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

2வது புல்லட் ரயில்
டில்லி முதல் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு, சண்டிகர் வழியாக 2வது புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 2024க்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு, 300 - 350 கி.மீ.,வேகத்தில் பயணிக்கும். இந்த ரயில் மூலம் பயண நேரம் 2.5 மணி நேரம் குறையும்.
இந்த ரயிலானது அம்பாலா, சண்டிகர், லூதியானா, ஜலந்தர் நகரங்களில் நின்று செல்லும்.

ஜப்பானிய தொழில்நுட்பம்

அதிவேக ரயில் திட்டத்தில் ஜப்பான் சிறந்து விளங்குகிறது. அந்நாட்டின் ஷின்கன்சென் புல்லட் ரயில் உலகில் அதிவேகமாக செல்லும் ரயில் என பெயர் பெற்றுள்ளது. இந்த ரயிலில் உள்ள வசதிகள், இந்திய புல்லட் ரயில் திட்டத்திலும் பயன்படுத்தப்படும். இதற்கான தொழில்நுட்பங்கள்,' மேக் இன் இந்தியா' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும்

கருத்துகள் இல்லை: