புதன், 13 செப்டம்பர், 2017

ஸ்டாலின் : தமிழகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்று திரளவேண்டும்! அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் ! ...

மெஜாரிட்டி இல்லாத ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த தமிழக நிர்வாகமும்
ஸ்தம்பித்திருக்கும் நிலையில் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் தமிழக மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 
நீட் தேர்வை எதிர்த்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று தாம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பேசியதாவது:  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது நீட்டிற்காக மட்டும் நடைபெறும் போராட்டமல்ல. மாணவர்களுக்குக்காக, நம்முடைய வருங்கால சந்ததியினருக்காக நடைபெறக்கூடிய போராட்டம். 

நீட் தேர்வைப் பொறுத்த வரையில் ஓராண்டிற்கு விலக்களிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம், அந்த விலக்கை பெற்றுத்தருவோம் என உறுதிமொழி தந்தீர்களே? பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் நிர்மலா சீதாராமன் உறுதி தந்தாரே, நடந்ததா? 
இந்த நீட் தேர்வினால் என்னென்ன கொடுமைகள், என்னென்ன அக்கிரமங்கள். நீட்டிற்கு என தனியாக கோச்சிங் சென்டர் அமைக்கப்படும் என ஒரு செய்தி வந்திருக்கிறது. மாணவர்கள் பயிற்சி தருவதற்கு கட்டணமாக 3 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். பள்ளி படிப்பை முடித்துவிட்டு மருத்துவ கல்லூரிக்கு செல்ல வேண்டுமென சொன்னால், நீட் தேர்வு எழுத வேண்டும். அந்த நீட் தேர்விற்கு பயிற்சி தரப்போகிறார்களாம். அதற்கு 3 லட்ச ரூபாயாம். கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை எளிய மாணவர்களால் எப்படி அந்தக் கட்டணம் செலுத்த முடியும்?  
ஒரு சில கோச்சிங் சென்டர்களில் சேர வேண்டும், அதிலே வசூல் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு மத்தியில் இருக்கும் ஆட்சி செயல்படுகிறது, அதற்கு உடந்தையாக மாநிலத்தில் இருக்கும் ஆட்சி துணை நிற்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது நாம் வெட்கப்படுகிறோம். 
காவிரி நீரை திறந்துவிட முடியாது என கர்நாடகம் சொல்கிறது, அதனை தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி சொல்கிறது. அதனை மத்தியில் இருக்கும் அரசு வேடிக்கை பார்க்கிறது. இன்றைக்கு படமாக நம்மிடத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கும் அனிதாவின் மரணத்திற்கு பிறகும் அதிமுக வாய் திறக்கவில்லை என்றால் நாங்கள் இப்படி கேள்வி கேட்க மாட்டோமா? 
நீட் தேர்வு மட்டுமா பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, அரசு ஊழியர்கள் பிரச்சினை, ஆசிரியர்கள் போராட்டம், கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம், நெடுவாசலில் தொடர்ந்து போராடுகிறார்கள், பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அறிவித்து விவசாயிகள் வாழ்வில் விளையாடும் மத்திய அரசு. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்கிற நிலையில்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநரைச் சந்தித்து, பலமுறை கடிதம் அளித்துவிட்டோம். குடியரசுத் தலைவரிடத்திலும் வலியுறுத்தி விட்டோம். 
மெஜாரிட்டி இல்லாத ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த தமிழக நிர்வாகமும் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் தமிழக மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றார் ஸ்டாலின்.
tamilthehindu

கருத்துகள் இல்லை: