சனி, 16 செப்டம்பர், 2017

பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர் .. அமைச்சர் இராமலிங்க ரெட்டி

பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் : கர்நாடக அமைச்சர்!தந்தை பெரியாரின் பெயர் பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்குச் சூட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் புரட்சிகரமான சமூகச் சிந்தனையாளர். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, சாதிப் பாகுபாடுகளைக் களைதல், சமூக நீதி, பெண்ணுரிமை ஆகியவை குறித்த அவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும் தமிழகத்தில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
வரும் 17 ஆம் தேதி நாளை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் செப்டம்பர் 15 (நேற்று) பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களுக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், “சமூக நீதிக்காகவும், திராவிடக் கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார். அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கான பலனை தற்போது நாம் அனுபவித்து வருகிறோம். அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும். அவரின் போராட்டங்களால் நாட்டின் பெரும் புரட்சியே ஏற்பட்டது. எனவே, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பெங்களூரில் ஒரு பேருந்து நிலையத்துக்குப் பெரியாரின் பெயர் சூட்டப்படும்” என அறிவித்தார்.
மூட நம்பிக்கையைத் தடுக்கும் வகையில் கர்நாடக அரசு சட்ட மசோதாவைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது என்றும் மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி, புத்தர், பெரியார், அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மூத்த சிந்தனையாளர் கே.எஸ்.பகவான், தலித் சங்கர்ஷ சமிதியின் தலைவர் எச்.மாரப்பா, காங்கிரஸ் பிரமுகர் உதயசங்கர், தம்மையா, எச்.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் minnambalam

கருத்துகள் இல்லை: