வெள்ளி, 15 செப்டம்பர், 2017

திமுக எம் எல் ஏக்களிடம் பதவி விலகல் கடிதங்கள் பெறப்பட்டதா? திமுக அதிரடிக்கு ஆயத்தம்?

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க
உத்தரவிட வேண்டும்; எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் கடைசி ஆயுதமாக கூண்டோடு ராஜினாமா முடிவுக்கு திமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையிலேயே திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருந்தால் பொதுத்தேர்தல் நடந்திருக்குமே என அங்கலாய்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர். ஆனால் திமுக அமைதி காத்தது. இதேபோல் தினகரன் அணி போர்க்கொடி தூக்கியுள்ள தற்போதைய சூழலில் திமுகவின் வியூகம் மீது அதிருப்தி நிலவுகிறது. ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலினோ, கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது என திட்டவட்டமாக கூறி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பதை தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தபோதே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.


திமுகவும் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி பார்த்தது. ஆனால் ஆளுநரோ, இது உட்கட்சி பிரச்சனை என கைவிரித்துவிட்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறது திமுக. அதேபோல் குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் எடப்பாடி முயற்சிக்கு தடை கோரியும் நீதிமன்றம் போயுள்ளது திமுக.

இந்த இரு வழக்குகளின் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காமல் போனால் திமுக மீதான அதிருப்தி அதிகரிக்கவே செய்யும். இதனிடையே தற்போது தேர்தல் நடைபெற்றால் திமுகவே வெல்லும் என அக்கட்சி நடத்திய சர்வேயில் தெளிவான முடிவுகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின்னர் திமுக அதிரடியாக செயல்படலாம் என கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது; தினகரன் அணி எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய வைப்பது என ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். திமுக எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதங்களும் பெறப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான கடைசி ஆயுதமாக ராஜினாமா படலத்தை திமுக நிச்சயம் அரங்கேற்றும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: