புதன், 24 மே, 2017

முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை! Rafseeena.. 1180/1200 in HSS exam commits suicide


கேரளாவில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஏழ்மை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ரஃப்சினா(17) என்ற மாணவி சிவபுரம் மேல் நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்றார். கடந்த மே-15 ஆம் தேதி வெளியான பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் ரஃப்சினா 1200க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவது இடத்தை பிடித்தார். தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களுக்குப் பின்னர், மாலூரில் லட்சுமவேத காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்த ரஃப்சினாவிடம் உள்ளூர் ஊடகத்தினர் பேட்டி எடுக்க சென்றுள்ளனர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் அவரின் கடின உழைப்பு குறித்தும், குடும்ப நிலையை குறித்தும் கட்டுரையை வெளியிட்டனர். அதில் ரஃப்சினா தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் ஒரே அறையில் வாழ்ந்தது, அவருடைய வறுமை, அதனால் போராடி பெற்ற மதிப்பெண் என அவரைப்பற்றி எழுதியுள்ளனர். மேலும் ரஃப்சினாவின் தாய் ரஹ்மாத், தின கூலிக்கு வேலைக்கு செல்வது, அவருடைய மூத்த சகோதரி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபார்ம் படிக்கிறார், சகோதரர் பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் வேலை செய்கிறார் என குடும்ப சூழ்நிலை பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை படித்த கண்ணூர் எம்பி ரஃப்சினாவின் கல்லூரி படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதையடுத்து ரஃப்சினா கடந்த மே-17 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார்.
ஊடகங்கள் மாணவியின் சாதனையை பாராட்டாமல் அவருடைய பொருளாதார போராட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி தன்னுடைய ஏழ்மை நிலைமை தனது நண்பர்களுக்கு தெரிந்துவிட்டது என தற்கொலை செய்துக் கொண்டார். பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதை கொண்டாடாமல் ரஃப்சினா தற்கொலை செய்துக் கொண்டது பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: