வியாழன், 25 மே, 2017

புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு மக்கள் தீ வைப்பு !

பார்களுக்கு தீ வைப்பு!minnambalam.com :தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழகத்தில் 3,500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக் கடையை திறக்க தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று, புதுச்சேரியில் 164 மதுக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு எதிராக, அடுத்தடுத்து அமைந்துள்ள 9 மதுபானக் கடைகளை உடைத்தும், மதுபான பாருக்கு தீ வைத்தும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில், யூனியன் சோரியாங்குப்பத்தில் ஒரு கிலோமீட்டருக்குள் 10 தனியார் மதுக்கடைகள் உள்ளன. இவை பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், புதுச்சேரியில் நெடுஞ்சாலையில் மூடப்பட்ட சுமார் 15 தனியார் மதுபானக் கடைகளை சோரியாங்குப்பத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 9 மதுபானக் கடைகளை கற்களால் தாக்கியும், பெயர்ப்பலகைகளை உடைத்தும் மேற்கூரைகளை பிய்த்து எறிந்தனர்.
அப்போது, அங்கிருந்த போலீஸார் மக்கள் மீது லேசாக தடியடி நடத்தியுள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் சிலர் நான்கு பார்களுக்கு தீ வைத்தனர். மதுக்கடைகளின் உள்ளே மதுபாட்டில்கள் இருந்ததால் தீ வேகமாக பரவி எரிந்தது.
தீ வைத்த சம்பவம் தொடர்பாக நான்குக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து பாகூர் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். கைதானவர்களை விடுவிக்குமாறு பெண்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், போலீஸார் கைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாங்கள் அடிக்கவில்லை. அவர்களை வெளியே விடுவதில் சாத்தியக் கூறுகள் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைதானவர்களை பார்க்க வந்த எங்களையும் சிறையில் அடைத்துவிடுவதாக, மிரட்டுகின்றனர். அப்பாவிகளை பிடித்து,சிறையில் வைத்து சித்ரவதை செய்கின்றனர். இது தொடர்பாக எம்.எல்.ஏ-யிடம் உதவி கேட்டதற்கு எந்தவொரு பதிலும் இல்லை. ஓட்டுக்கு மட்டுமே எங்களிடம் வருகின்ற இவர்கள்,பிரச்சனையின்போது வருவதில்லை. சிறையில் இருப்பவர்களை பார்க்காமல்,வீடு திரும்ப மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: