சனி, 22 ஏப்ரல், 2017

எடப்பாடி - பன்னீர் கோஷ்டி பேச்சுக்கள் ... பேரம் விரைவில் படியும் ... முழுசா 4 வருஷ கல்லா பாக்கி ...

டிஜிட்டல் திண்ணை:முதல்வர் பதவியை விட்டுத் தரலாம்! : எடப்பாடி டீமில் இருந்து முதல் குரல்“பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக-வை இணைக்கும் முயற்சிகள் தொடங்கியிருந்தாலும் அதில் முன்னேற்றம் என்பது எதுவும் இல்லை. முதல்வர் பதவி என்பதுதான் இரண்டு அணிகளுமே முரண்டு பிடிக்கும் முதல் விஷயமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். வைத்தியலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் உட்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏழுபேர் என்றாலும், பன்னீர் டீமில் உள்ளவர்களுடன் நேரடியாகப் பேசிவருவது அமைச்சர்கள் ஜெயக்குமாரும், தங்கமணியும்தான். பன்னீர் டீமில் இருக்கும் கே.பி.முனுசாமி, பொன்னையன், செம்மலை ஆகிய மூவரும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மூவருமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குக் காரணம், முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். கவுண்டர் சமுதாயத்தில் இப்போதுதான் ஒருவர் முதல்வராகி இருக்கிறார். அதை விட்டுத்தர முடியாது என்று எடப்பாடி டீமில் சிலர் சொல்லிவந்தனர். அவர்களை சமாளிக்கத்தான் பன்னீர் டீமில் உள்ள கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே பேச்சுவார்த்தைக்குப் போகிறார்கள். பன்னீர் டீமில் உள்ளவர்கள் முதல்வர் பதவி சம்பந்தமாக பேசும்போது, ‘கொங்கு மண்டலத்துக்கு அமைச்சரவையில் தேவையான முக்கியத்துவம் தரப்படும். அதுவும் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி மீது அவரது மாவட்டத்திலேயே ஏகப்பட்ட எதிர்ப்பு இருக்கிறது. கட்சியில் இன்று இருக்கும் பலருக்கும் அவர் ஜுனியர்தான். அதனால் அவரையே முதல்வராகத் தொடர வேண்டும் என நீங்க அடம்பிடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதுவும் இல்லாமல், சசிகலாவுக்கு பணம் வசூல் செய்து கொடுத்தவர் என்பதற்காக அவருக்கு அந்தப் பொறுப்பை அவர் கொடுத்திருந்தார். சசிகலாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துட்டோம். அப்புறம் அவர் வெச்சுட்டுப் போனவர் எதுக்கு இருக்கணும்னு சொல்றீங்க? அவருக்கு மாற்றாக வேறு ஒருவர் இருக்கட்டும். துணை முதல்வராக நீங்க யாரைச் சொல்றீங்களோ அவங்களை நியமிச்சுடலாம்...’ என்று சொன்னார்களாம்.

ஆனால், எடப்பாடி டீமில் பேசப் போனவர்களோ, ‘எடப்பாடி பழனிசாமி சரியான நபர் என்று நாங்களும் சொல்ல வரவில்லை. ஆனால் அடிக்கடி முதல்வரை மாற்ற வேண்டாம் என்பதுதான் எங்கள் எண்ணம். ஆறு மாசம் இப்படியே போகட்டும். அதன்பிறகு அதைப்பற்றி எல்லோரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம். அதுவரைக்கும் நீங்களும் பொறுமையா இருக்கணும். தினகரனை அனுப்பச் சொன்னீங்க... அனுப்பிட்டோம். இனி, அவரை நிச்சயம் சேர்க்க மாட்டோம். அந்தம்மாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்குவது சம்பந்தமாக பேசிட்டிருக்கோம். அதையும் பேசி முடிவு பண்ணிடலாம். ஒரு குடும்பத்தோட கையில் கட்சி இருக்கக் கூடாது என்பதுதான் நீங்க சொன்னது. இப்போ அது இல்ல. அதனால நாம ஒண்ணு சேரணும்!’ என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி, இரண்டு அணியில் உள்ளவர்களும் மாறி மாறி பேசியதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் வேலுமணிக்கே, பழனிசாமி முதல்வராக இருப்பதில் உடன்பாடு இல்லை. வேலுமணிக்கும் பழனிசாமிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்தது. அதனால், எடப்பாடி அணியில் இருந்தாலும், ‘முதல்வர் பதவியை அவங்க கேட்டால் கொடுத்துட்டு பிரச்னையை முடிக்கிறதுதான் நல்லது’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளாராம் வேலுமணி”  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: