சனி, 22 ஏப்ரல், 2017

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் கைவிட முடிவு ! எதிர்க்கட்சிகளின் கடையடைப்பில் பங்கேற்கவும் தீர்மானம்!

திராவிட முன்னேற்றத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்வரும் 25 ஆம் தேதியன்று விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து அனைத்து கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, இன்று (22-04-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்க ளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்

ஸ்டாலின்: எதிர்வரும் 25 ஆம் தேதி விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து, மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தக்கூடிய வகையில் தமிழகம் முழுவதும் ஒரு முழு அடைப்புப் போராட்டத்தை, ஏற்கனவே அனைத்துக் கட்சி சார்பில் கூடி முடிவெடுத்து அறிவித்து இருக்கிறோம். அந்தப் போராட்டம் எந்த வகையில் அமைய வேண்டும் என்பது இன்று திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகளை பரிமாறி சில முடிவுகளை எடுத்திருக்கிறோம்.

;அதேநேரத்தில், டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் பல்வேறு நிலைகளில், பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக அவர்கள் நிறுத்தி வைத்து விட்டு 25 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய முழு அடைப்புப் போராட்டத்திற்கும், அதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாங்கள் இதுகுறித்து எடுக்க இருக்கக்கூடிய அந்த நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும், அந்தப் போராட்டங்களில் அவர்களும் பங்கேற்க வேண்டும். எனவே அவர்கள் போராட்டத்தை தற்காலிமாக நிறுத்தி வைத்துவிட்டு, இதற்கு ஆதரவு தர வேண்டும் என்ற நிலையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த தீர்மானத்தை  அய்யாகண்ணுவுக்கும்  நாங்கள் இப்போது அனுப்பியிருக்கிறோம்.

செய்தியாளர்: பிரதமர் விவசாயிகளை சந்திக்க தொடர்ந்து மறுக்கிறார். இந்த நிலையில் விவசாயிகளை அழைத்துக் கொண்டு போய் பிரதமரை சந்திக்கும் முடிவுகள் எல்லாம் எடுத்து இருந்தீர்களே? 

ஸ்டாலின்: ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை எல்லாம் அழைத்துக்கொண்டு சென்று அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்கின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தின் நகலுடன், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையிலும், தனிப்பட்ட முறையில் நானும் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கடந்த இரு நாட்களாக டெல்லியிலேயே தங்கியிருந்து, பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டார். ஆனால், அந்த முயற்சிகளுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. நான் எழுதிய கடிதற்கும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.;">செய்தியாளர்: பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் 25 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து திட்டம் ஏதும் உள்ளதா?

ஸ்டாலின்: அது குறித்துதான் இன்றைக்கு விவாதித்து இருக்கிறோம். 25 ஆம் தேதி போராட்டம் நடைபெறும்போது, அது உங்களுக்கே தெரியவரும். பொறுத்திருந்து பாருங்கள்.

செய்தியாளர்: விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு ஊழியர்களிடம் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு இருக்கிறீர்களா?

ஸ்டாலின்: கட்சி பாகுபாடின்றி எல்லா அமைப்புகளிடமும் ஆதரவு கேட்டிருக்கிறோம். திரைப்படத்துறையினர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், வணிகர் பெருமக்கள், சினிமா தொழிலாளர்கள் உள்பட எல்லா அமைப்புகளுக்கும், அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாக வைத்து தனிப்பட்ட முறையில் நான் கடிதம் எழுதியிருக்கிறேன். எல்லா அமைப்புகளும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

செய்தியாளர்: மத்திய அமைச்சர் வெளிப்படையாக விவசாய கடன் ரத்து செய்யப்படாது என்று அறிவித்துள்ள சூழ்நிலையில் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
;ஸ்டாலின்: போராட்டத்தின் நோக்கம் குறித்த விளக்கங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக மயிலை மாங்கொல்லையில் இன்றைக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அடுத்ததாக 25 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்குப்பிறகும் மத்திய – மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை என்றால், மீண்டும் நாங்கள் கூடி விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். நக்கீரன்   

கருத்துகள் இல்லை: