சனி, 18 பிப்ரவரி, 2017

Ex வானாளாவியவர் உபயம் : :மதுசூதனன் எல்லாரையும் கட்சி விட்டு நீக்கும் வானளாவிய பார்முலா?

ஓஹோ கதை அப்படி போவுதா? எல்லாரையும் விலைக்கு வாக்குனவங்க, ஒரு முக்கியமான மூளைய மிஸ் பண்ணிட்டாங்க.
அது தான் நிறைய வேலை கொடுக்குது.
இங்க எம்.எல்.ஏக்கள் புடிக்கறதுக்கு ஓ.பி.எஸ் உரையாற்றிக்கிட்டு இருக்கும் போதே, மைத்ரேயன் எம்.பி தலைமையில் ஒரு குரூப் டெல்லியில் புகார் கொடுத்துக்கிட்டு இருந்தது.
ஆட்சியே கிடைக்குமான்னே தெரியல, அதுக்குள்ள கட்சிய பிடிக்க டெல்லி போய் நிக்கிறாங்களேன்னு சிலர் நினைச்சிருக்கலாம். இன்னைக்கு சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன்ல இருந்து ஓலை வந்துடுச்சி. இதுக்கு பின்னாடி அந்த மைண்ட் தான்.
ஓ.பி.எஸ் போர்கொடி தூக்க ஆரம்பிச்சதுல இருந்தே சசி நீக்கல் விளையாட்ட ஆரம்பிச்சாச்சி. ஒ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்க, கொடுக்க அவர்களை பார்த்து அம்பயர் மாதிரி கைய தூக்கிக்கிட்டே இருந்தாங்க சசி, 'அவுட்'.
இதுக்குப் போட்டியா மதுசூதனன் அவைத்தலைவருங்கிற கெத்ல, சசி அண்ட் கோவை நீக்கினார். அப்புறம் இன்னைக்கு மதுசூதனன் மானாவாரியா எல்லாரையும் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டு இருக்காரு. பலருக்கும் அது காமெடியா தான் இருக்கும். அதுக்கு பின்னாடியும் திட்டம் இருக்கு.
இன்னைக்கு காலைல சபாநாயகர சந்திச்சு ஓ.பி.எஸ் அணி மனு கொடுத்தது, "ரகசிய வாக்கெடுப்பு வேணும்னு". இருக்கறது 10 எம்.எல்.ஏ,இதுல இந்த வேல தேவையான்னு பரவலான கேள்வி. அப்புறம் மாஃபா பாண்டியராஜன் ஒரு பேட்டிக் கொடுத்தார். "கொறடா எங்களுக்கு உத்தரவு போட முடியாது. ஏன்னா, புது மந்திரிசபை அமைச்சப்ப , புதுசா கொறடா போடல, அவரே செல்ல மாட்டாரு". அந்த மூளையோட ஐடியா தான் இது.

மதுசூதனன் இப்போ இந்த கொறடாவயும் கட்சிய விட்டு நீக்கிட்டாரு, எடப்பாடியவும் நீக்கிட்டாரு. எடப்பாடிக்கு ஓட்டு போடலன்னா, அவரே கட்சியில இல்லன்னு காமெடி நடக்கும். இது காமெடி போல இருந்தாலும், அந்த சட்ட மூளையின் வேலை.
தேர்தல் கமிஷன் சசிக்கு தற்காலிக பொதுச்செயலாளர் மேட்டர்ல நோட்டீஸ் கொடுத்த பிறகு எல்லாம் குழப்பமே. இப்போ யாருக்கு அதிகாரம்னும் குழப்பம். யார் கட்சிங்கறதும் குழப்பம்.
இப்படித் தான் 1987ல் எம்.ஜி.ஆர் இறந்தப்ப ஜானகி அணி, ஜெயலலிதா அணின்னு பிரிஞ்சு நின்னாங்க. சட்டமன்றத்தில் மெஜாரிட்டி காட்டும் சூழல். அதிமுக 132 ச.ம.உக்கள். ஜானகி பின்னாடி 97 எம்.எல்.ஏக்கள், ஜெயலலிதா பின்னாடி 33 பேர். 1988 ஜனவரி 28 நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில். ஜெயலலிதா அணியின் 33 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் சபாநாயகரால்.
இந்தி எரிப்புக்காக சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை பதவி நீக்கம் செய்திருந்தார் சபாநாயகர். அப்போ திமுக 24 எம்.எல்.ஏக்கள். 10 +33 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மீதி இருக்கிறவர்களை கொண்டு மெஜாரிட்டி என சொல்லப்பட்டது. அப்போது தான் சட்டமன்றத்தில் வரலாறு காணாத கலவரம்.
ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொண்டு சட்டசபைக்கு ரத்த அபிஷேகம் செய்வித்தார்கள். சட்டசபை கலவரம், சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசை கலைத்தது மத்திய அரசு. மத்தியில் அப்போது காங்கிரஸ் அரசு. பிரதமர் ராஜீவ்காந்தி. அவரிடம் புகார் செய்தவர் ஜெயலலிதா.
இப்போது அதிமுக பலம் 134. சசி, ஓ.பி.எஸ் அணியாக பிரிந்து நிற்கிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு மத்திய அரசு ஆதரவு என சசி அணி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி 19 நம்பிக்கை வாக்கெடுப்பு.
சட்டசபையில் கொறடா சொல்றபடி ஓட்டு போடனும்னு மந்திரி ஓ.எஸ்.மணியன் சொல்றாரு. அவரு கொறடாவே இல்லன்னு முன்னாள் மந்திரி மாஃபா சொல்றாரு.
வெறும் ஓ.பி.எஸ் மட்டும் இருந்திருந்தா இவ்வளவு நெருக்கடி வந்திருக்காது. தேர்தல் கமிஷனும் போயிருக்க மாட்டாரு. சபாநாயகர் கிட்டயும் மனு கொடுத்திருக்க மாட்டாரு. இந்த நீக்கல் வேலையிலயும் இறங்கி இருக்க மாட்டாரு. அவரு பாட்டுக்கு, "போர், போர், போர்" ன்னு முழங்கிட்டு அம்மா சமாதிக்கு போய் மௌன விரதத்தில் உட்கார்ந்திருப்பாரு.
2017ல் 'ரகசிய வாக்கெடுப்பு' கேட்க சொன்னவர், 1988 சட்டமன்றத்தில் ஓப்பன் வாக்கெடுப்பு நடத்திய "வானளாவிய அதிகாரம்" கொண்டிருந்த அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.
ஆமாம், சசி மிஸ் பண்ணிய அந்த சட்டமூளை பி.எச்.பாண்டியன்.
இப்போது ஜெயலலிதாவும் இல்லை, ஜானகியும் இல்லை. சட்டசபை இருக்கிறது. பி.எச்.பாண்டியன் உள்ளே இல்லை.
# வரலாறு வேடிக்கை பார்க்கிறது !>சிவசங்கர் எஸ்.எஸ்<

கருத்துகள் இல்லை: