சனி, 18 பிப்ரவரி, 2017

அருண்குமார் எம் எல் ஏ:: அதிமுகவில் சசி குடும்பம் புகுந்துள்ளது அதனால் வெளியேறினேன் .. கோவை வடக்கு

MLA Arun Kumar oppose Sasikala family in ADMK கோவை: 10 நாட்களாக கூவத்தூரில் மற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் இருந்த கோவை வடக்கு எம்எல்ஏ அருண்குமார் அங்கிருந்து வெளியேறி சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அருண்குமார் பேசியதாவது:
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என யாரும் அவர்களுடைய குடும்பத்தை கட்சிக்குள் நுழைக்கவில்லை. எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவில் வழி நடத்திய அதிமுகவில் தற்போது ஒரு குடும்பம் புகுந்துள்ளது. அதனை எதிர்த்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பணம், பதவி, புகழ் எனக்கு முக்கியமல்ல. மக்கள் பணியே எனக்கு முக்கியம் என்ற அடிப்படையில் எம்ஜிஆரின் தொண்டனாகிய நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அங்கிருந்து வெளியேறிய பின்னர் ஓபிஎஸ்ஸை நான் சந்திக்கவில்லை. எனக்கு அணியெல்லாம் ஒன்றும் இல்லை. சின்னம் இரட்டை இலை. அதிமுக கட்சி இதுதான் எனக்கு முக்கியம். சசிகலாவை எதிர்க்கிறோம் அவ்வளவுதான். கட்சியில் இந்த முடிவு மாற்றப்பட வேண்டியது அவசியம்.

சசிகலா குடும்பம் அதிமுவில் அதிகாரம் செலுத்துவது குறித்த என் கருத்துக்களை மூத்த நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தேன். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தது போல் தெரியவில்லை. அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கூவத்தூரில் எல்லோரும் நன்றாகத்தான் இருந்தோம். ஒரு குழுவாக இருந்து சில முடிவுகளை எடுப்போம் என்று நினைத்துத்தான் அங்கே போனோம். அங்கு எந்தத் தொந்தரவும் இல்லை. அதனால்தான் 500 கி.மீ. தூரம் பயணித்து வந்திருக்கிறேன். குண்டர்கள் அடிக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.
அதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உறுதிதுணையாக இருப்போம். ஆனால் சசிகலா குடும்பத்திற்கு எதிராகதான் செயல்படுவோம் என்று அருண்குமார் எம்எல்ஏ கூறினார்  tamiloneindia

கருத்துகள் இல்லை: