புதன், 15 பிப்ரவரி, 2017

ஸ்டாலின்:கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிக்கமாட்டோம் ! மக்களை தேர்தல் மூலம் நேரடியாக ...

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை 11 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அறிவாலயத்தில் கூடியுள்ளது. வழக்கமாக இப்படியான கூட்டங்களுக்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்தான் நேரிடியாக தொலை பேசியில் அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. நேற்று இரவு ஸ்டாலின் செல்ஃபோனிலிருந்து, கூட்டத்திற்கு அழைக்கும் அவசர எஸ்எம்எஸ் அனைத்து எம்எல்ஏக்களுக்கு வந்திருக்கிறது. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள். எனவே அவர்கள் உடனே திமுக செயல் தலைவரான ஸ்டாலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்போது அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்திருக்கிறது. சிலருக்கு தொடர்பு கிடைத்த போதும் ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தோடு சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த அவசர கூட்டத்திற்கு காரணம், பாஜக மற்றும் ஓ.பிஎஸ் தரப்பு என்று கூறப்படுகிறது. அதாவது பாஜகவும் ஓபிஎஸ் அணியும் இணைந்து திமுக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஈர்க்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் ஸ்டாலின் தரப்பிற்கு கிடைத்திருக்கிறது. இதனால் ஸ்டாலின் உடனே எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
மேலும், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த எம்எல்ஏக்கள், “ நாங்கள் அதிமுக எம்எல்ஏக்கள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் நம் கட்சிக்கு வரும் பட்சத்தில் நாமே ஆட்சியமைக்கலாம்” என்று கூறிவருகிறார்களாம். ஆனால் ‘அவர்களுக்கு சட்டம் தெரியாமல் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவில் இருந்து மொத்தமாக 90 எம்எல்ஏக்கள் வந்தால் தான் அவர்கள் பதவி தப்பிக்கும். அதைவிட குறைந்த எண்ணிக்கையில் வரும் பட்சத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் அவர்களுடைய எம்எல்ஏ பதவி பறிபோய்விடும். இதை புரிந்து வைத்திருக்கும் ஸ்டாலின் அதை மறுத்திருக்கிறார். மேலும் அதிமுக தலைமைக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுகவினர் ஆதரவோடு ஆட்சியமைத்தால் அது திமுகவிற்குப் பாதகமாக அமையும் என்று இந்த யோசனையை வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியதாகவும் தெரிகிறது. ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நாம் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்று ஸ்டாலின் தரப்பு நம்புகிறது. மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் ஆலோசிக்கத்தான் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கவிருப்பதாக வெளியான தகவலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் மறுத்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: