வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஒரு பெண் கான்ஸ்டபிளுக்கு இத்தனை டார்ச்சர்களா? திடுக் வாக்குமூலம்

vikatan.com : காதலித்து ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த பெண் போலீஸ் ராமு தற்கொலை செய்தார். காவல்துறை உயர் அதிகாரிகளின் மிரட்டல் காரணம் ராமு இந்த முடிவை எடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ராமு தற்கொலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்துக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகளும் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ராமு, அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். இவர், கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகம் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர் ராமுவின் குடும்பத்தினர். அருமைநாயகத்தை கைது செய்யும்வரை ராமுவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள்  தெரிவித்துள்ளார் ராமுவின் அம்மா பார்வதி. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் எரிமலையாக வெடித்துள்ளது.
இதுகுறித்து  மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், "ராமுவின் அப்பா சண்முகம் இறந்து விட்டார். இதனால் குடும்ப பொறுப்பு ராமுவின் அம்மா பார்வதி மற்றும் ராமு ஆகியோர் மீது விழுந்தது. பார்வதி, விவசாய வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.
ராமு, படிப்புடன் வேலையை செய்து குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தார். இந்தநிலையில் போலீஸ் வேலை ராமுவுக்கு கிடைத்தது. இதன்பிறகு அவரது குடும்பம் ஓரளவு நல்ல நிலைமைக்கு முன்னேறியது. ராமுவுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். அவர்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து வைக்க முன்னின்று பாடுபட்டவர் ராமு. இதில் ஒரு சகோதரி ராமுவைப் போல போலீஸாக சென்னையில் பணியாற்றுகிறார். அருமைநாயகத்தை ராமு காதலித்ததால் அவருக்கு திருமணம் நடக்கவில்லை. இவர்கள் இருவரும் ராஜபாளையத்தில் லாட்ஜில் கணவன், மனைவி என்று குமார், விஜயா என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
2014ல் அருமைநாயகத்திடம் திருமணம் செய்ய ராமு வற்புறுத்தியபோது அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் அவர், அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் அருமைநாயகத்தின் மீது புகார் கொடுத்தார். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் அருமைநாயகத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார் ராமு. இந்த மனுவுக்கு அருமைநாயகத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அம்பாசமுத்திரம் போலீஸார் செப்டம்பர் 3ம் தேதி எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதன்பிறகும் அருமைநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் ராமு, கடந்த பிப்ரவரி மாதத்தில் அருமைநாயகம் மீது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது எஸ்.பி விக்ரமன் இல்லை. இதனால் அங்குள்ள இன்ஸ்பெக்டர் நவீனை சந்தித்து ராமு விவரத்தை சொல்லியுள்ளார். அப்போது நவீன், அருமைநாயகத்துக்கு ஆதரவாக பேசியதோடு ராமுவை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ராமுவை வேலையை விட்டு நீக்கியதாகவும் சில போலீஸ் அதிகாரிகள் பேசியுள்ளனர். ஒருகட்டத்தில் ராமுவுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாகவும் போலீஸ் அதிகாரிகளே பஞ்சாயத்து பேசி இருக்கின்றனர். அதற்கும் ராமு தரப்பு சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் சேரன்மகாதேவி டி.எஸ்.பி அலுவலகத்தில் ராமு, அவரது அம்மா பார்வதி ஆகியேரை போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதோடு அருமைநாயகம் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்க வற்புறுத்தி அதற்கு கையெழுத்தையும் பெற்றுள்ளனர். இதன்பிறகு ராமு, சக போலீஸ் அதிகாரிகளால் பழிவாங்கப்பட்டுள்ளார். அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். ஆனால் ராமுவை ஏமாற்றிய அருமைநாயகம், சுதந்திரமாக சென்னை வண்டலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், போலீஸ் அதிகாரிகள் அருமைநாயகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் ராமு, மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையில் அருமைநாயகமும், அவரது தரப்பினரும் ராமுவுக்கு போனில் மிரட்டல் விடுத்தனர். அதையெல்லாம் பதிவு செய்த ராமு, புகாருடன் ஆடியோ சி.டி ஆதாரத்தையும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார். இதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ராமு, கடந்த 9ம் தேதி தற்கொலை செய்துள்ளார். அதற்குப்பிறகும் அருமைநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் அவரது உடலை வாங்க மறுத்ததோடு, நெல்லை சரக டி.ஐ.ஜி தினகரனிடம் 11 அமைப்புகள் மற்றும் பார்வதி சார்பிலும் புகார் கொடுத்துள்ளோம். ராமுவின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட எஸ்.பி. விக்ரமன், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம். ராமுவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார். இதுகுறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி தினகரனிடம் கேட்ட போது, "பெண் போலீஸ் ராமு தற்கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர் குற்றம்சாட்டியுள்ள அருமைநாயகம், சென்னையில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ராமு தரப்பினர் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுளேன். ராமுவும், அருமைநாயகமும் பேசிய ஆடியோவும் எங்களிடம் உள்ளது. முதல் முறை ராமு, புகார் கொடுக்கும்போதே  ஒரே முடிவில் இருந்திருந்தால் அருமைநாயகத்தின் மீது அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். யாருக்கும் சாதகமாக காவல்துறை செயல்படவில்லை" என்றார்.

எஸ்.மகேஷ்

கருத்துகள் இல்லை: