புதன், 12 அக்டோபர், 2016

காவல்துறை விசாரணைக்கு பயந்து தீக்குளித்த இந்துமுன்னணி பிரமுகர் பலி

கோவை, அக். 8 – சசிக்குமார் படுகொலையை தொடர்ந்து கொலையாளிகளை  காவல்துறையினர் கைது செய்ய காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் தன்னையும் விசாரணை செய்வார்கள் என்கிற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.
இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22 ஆம்தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சங்பரிவார அமைப்புகள் கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டமிட்டு நடைபெற்ற வன்முறையில் சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்தது. மேலும், இரண்டு நாட்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு நிலையை ஸ்தம்பிக்கவைத்து பெரும் அச்சத்திற்கு ஆளாக்கினர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் இந்த வன்முறைக்கு கடும் கண்டனத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தனர்.
இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இந்துமுன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கடந்த மூன்றாம் தேதி திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே சசிக்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் கொலை செய்தார் என்று ஆனந்தகுமாருக்கு உண்மைநிலை தெரியும் என்றும், இதன்காரணமாகவே அச்சத்திற்குள்ளாகி  தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும், வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் தன்னையும் கைதுசெய்துவிடுவார்கள் என்கிற அச்சத்தில் தற்கொலைக்கு முயன்றார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினரும் பலத்த பாதுகாப்போடு ஆனந்தகுமார் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதற்குள்ளாக ஆனந்தகுமாரின் சகோதரர் ரஞ்சித்குமார் தனது தம்பியை சென்னைக்கு கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், காவல் துறையினர் மன உளைச்சளை ஏற்படுத்துவதாக கூறி அவரது சகோதரர் ரஞ்சித்குமார் வியாழனன்று அரசு மருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்று அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். இந்நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி சனியன்று மதியம் உயிரிழந்தார்.
முன்னதாக தற்கொலைக்கு முயன்றதாக போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தநிலையில், வன்முறையில் ஈடுபட்டு கலவரம் செய்ததாக கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் ஆனந்தகுமார் மீது சனியன்று வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் உள்ளது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  /theekkathir.in

கருத்துகள் இல்லை: