வியாழன், 13 அக்டோபர், 2016

பொது சிவில் சட்டம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு... ஒரு சமூகத்துக்கு எதிரான...

டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்த ஆலோசனைகள் பெறும் மத்திய சட்ட ஆணையத்தின் முயற்சிகளை அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மத்திய அரசு ஒரு சமூகத்துக்கு எதிராக தொடுக்கும் போர் இது என்றும் அது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலாளர் வாலி ரெஹ்மானி கூறியதாவது:
மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது. பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும். எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.
இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது. அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். பொது சிவில் சட்ட முயற்சிகளை கைவிடவில்லை எனில் எங்களது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் முடிவெடுப்போம். இப்போதைக்கு முஸ்லிம் மக்களிடையே நாங்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் வாலி ரெஹ்மானி கூறினார்.
மேலும், ஜமையது உலிமா-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி "மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன" என்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்கள், சமூகக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், அரசியல் கட்சிகள், அரசு முகமைகள், ஆகியோரிடம் மத்திய சட்ட வாரியம் கேள்விகளை தயாரித்து அளித்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு முறையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: