வெள்ளி, 14 அக்டோபர், 2016

சோனியாவை அந்தோனியோ மரியானோ என்று ஜெயலலிதா திட்டியது பாஸ்ட் இஸ் பாஸ்ட்!’’

விகடன்.காம்  : மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்து சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பலவிதமான விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.“முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் ஜெயலலிதாவைப் பார்க்க திடீரென ராகுல் காந்தியை அழைத்து வந்தது காங்கிரஸின் ராஜதந்திரம் என்கிறார்களே?”
“இதிலே என்ன ராஜதந்திரம் இருக்கிறது? ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்கிற தகவல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் பேரணியில் இருந்த எங்கள் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் சொல்லப்​பட்டது. அப்போது அவர், ‘இதை ஒரு அரசியல் நிகழ்வாக ஆக்கவேண்டாம். பிரத்யேகமான தனிப்பட்ட விசிட் ஆக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
அதனால், அவரது வருகைப் பற்றி வெளியில் சொல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வளவுதானே தவிர, வேறு ஏதும் இல்லை. ராகுல் காந்தி, தமிழக முதல்வரைப் பார்க்க அப்போலோவுக்கு வருகிறார் என்கிறபோது, அதையொட்டி அரசியல் யூகங்கள், ஹேஸ்யங்கள்... இதையெல்லாம் மீடியாக்கள் எழுதுவது சகஜம்தான். அப்படித்தான் ராகுல் விசிட்டின் போதும் நடந்தது.’

சோனியாவை இந்திய பிரஜை கிடையாது. இத்தாலியைச் சேர்ந்தவர் என சுட்டிக்காட்டும் வகையில், ‘அன்டோனியோ மெய்னோ’ என்றெல்லாம் பல வகைகளில் கடுமையாக விமர்சனம் செய்தவர் ஜெயலலிதா. அப்படி​யிருக்க... தாங்கள் ஜெயலலிதாவைப் பார்க்க ராகுலை அழைத்து வந்தது ஏன்?

அரசியலில் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்ட காலமும் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்துகொண்ட காலமும் இருக்கிறது. எனவே, இதையெல்லயாம் அரசியலில் பகையாகவோ, தனிப்பட்ட பிரச்னையாகவோ எடுத்துக்க ​வேண்டியதில்லை என்பது என் கருத்து.  ஜெயலலிதாவின் விமர்சனத்தை சோனியாவோ, ராகுலோ தனிப்பட்ட முறையிலோ, நிரந்தரப் பகையாகவோ கருத வில்லை. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.

தமிழக அரசியல் விவகாரங்களில் கருணாநிதியை ராகுலுக்கு எந்த வகையில் பிடிக்கும்?

ராகுல் காந்திக்கு இன்னாரைப் பிடிக்கும்...இன்னாரைப் பிடிக்காது...  என்கிற கோணங்களில் பரப்பப்படும் வதந்திகளில் துளியும் உண்மை இல்லை. தமிழக அரசியலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், கூட்டணித் தலைவர் என்கிற முறையில் கலைஞரைப் போய் ஏன் ராகுல் சந்திக்கவில்லை என்று கேட்கிறார்கள். இந்தமுறை ராகுல் வந்தது ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி விசாரிக்க. ஜெயலலிதாவை சந்தித்ததால், அதை பேலன்ஸ் பண்ணணும்​என்பதற்காக உடனே போய் கலைஞரை, பேராசிரியரை, மற்ற கட்சித் தலைவர்களைப் பார்க்கணும்னு என்ன கட்டாயம் இருக்கிறது? அப்படிப் பார்த்திருந்தால்தான்... அது அரசியல் பண்ண வந்த மாதிரி ஆகியிருக்கும். ஆனால், அரசியல் பண்ணுவதற்காக ராகுல் வரவில்லை. அவர் வந்தது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஜெயலலிதாவைப் பார்க்க. வந்தார். பார்த்தார். சென்றார்.

உங்கள் மகன் ராமச்சந்திரன் தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் அறந்தாங்கி​யில் போட்டியிட்டுத் தோற்றார். அவரை தோற்​கடித்தது தி.மு.க என்கிற கோபம் உங்களுக்கு உள்ளுக்குள் இருக்கிறதா? ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு வந்ததா?

“தேர்தல் நேரத்தில் சின்னச்சின்ன குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். என் மகன் சுமார் ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். அதற்கு பல காரணங்கள் உண்டு. தி.மு.க நண்பர்கள் பலரும் நன்றாகத்தான் தேர்தல் வேலை பார்த்தார்கள். ஒருசில பேரின் தனிப்பட்ட விரோதத்தாலோ, சீட்டுக் கேட்டு கிடைக்கவில்லை என்கிற விரக்தியாலோ... முழுமையாகத் தேர்தல் வேலைகளைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இவர்களின் செயல்பாடுதான் தோல்விக்கு முழுக் காரணம் எனச் சொல்ல முடியாது. ஒருவேளை அந்த ஒரு சிலர் சரியாக வேலை பார்த்திருந்தால், ஆயிரம் ஓட்டு மேனேஜ் ஆகி வெற்றிபெற்றிருக்கலாம். கலைஞருக்கோ,  ஸ்டாலினுக்கோ என்ன சம்பந்தம் இருக்கிறது? தி.மு.க-வோட உறவைப் பாதிக்கிறதுக்கோ அல்லது ஸ்டாலினுடன் இருக்கும் உறவையோ, நட்பையோ பாதிக்கிறதுக்கோ என் மகன் தோல்வியை எப்படி காரணமாக சொல்லமுடியும்? நிச்சயமாகக்கிடையாது.

ஓ.பன்னீர் செல்வத்திடம் முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்து துறை​களைக் கவனிக்கும் பணியை ஒப்படைத்திருக்​கிறார்கள். ஆனால், அதற்கு முன்பு, ‘பொறுப்பு முதல்வர்’ நியமிக்க ​வேண்டும் என்று தி.மு.க-வினர் சொன்னார்கள். நீங்கள் அது வேண்டாம் என்று சொன்னீர்கள்? ஒரே கூட்டணியில் ஏன் இந்தக் குழப்பம்?

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இப்போதும் நீடிக்கிறது. கூட்டணி எதற்கு என்றால், தேர்தல் நேரத்தில் சீட் பங்கீடு வைத்துக்கொள்வது மற்றும் தேர்தல் பணிகளில் இணைந்து செயல்படவும், பொதுப் பிரச்னைகளில்  இணைந்து  செயல் படவும்தானே தவிர ஜெயலலிதா உடல்நலத்துக்காக நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இந்தத் தருணத்தில், தி.மு.க சார்பாக ஸ்டாலின் அவர் கருத்தைச் சொல்கிறார். காங்கிரஸ் சார்பில் எது சரியென்று நான் நினைக்கிறேனோ... அதை நான் சொல்கிறேன். கூட்டணியில் இருக்கிறதாலேயே, இந்த மாதிரி பிரச்னைகளில் அதுவும் முதல்வர் உடல்நிலை சரியல்லாமல் ஆஸ்பத்திரியில இருக்கிற சென்ட்டிவ் ஆன விஷயங்களில் இரண்டு பேரும் ஒரேமாதிரி கருத்தை சொல்லவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இரண்டு கருத்துக்கள் வேண்டுமானால் முரண்படாலாமே தவிர இரண்டு கட்சிகளிடையே குழப்பம் இருப்பதாகக் கருத முடியாது. தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை அரசியல் சட்டப்படி கவர்னர் நியமித்திருக்கிறார். தொடர்ந்து அரசாங்கம் நல்ல முறையில் செயல்படுவதற்கு இது துணையாக இருக்கும். இதை நான் வரவேற்கிறேன்”

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவரின் தோழி சசிகலா எந்த வகையிலும் அ.தி.மு.க-வில் முன்னிலைப்​படுத்தப்படக்​கூடாது என்று ராஜ்யசபா எம்.பி-யான சசிகலா புஷ்பா சொல்லியிருக்​கிறாரே?” /> “சசிகலா புஷ்பா, இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. அவரை நீக்கிவிட்டார்கள். இருந்தாலும், அதனால் ஏற்பட்ட கோபமோ, விரோத​மோ, எரிச்சலோ... ஏதோ ஒரு அடிப்படையில அந்த அம்மாவுக்கு தெரிந்த கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.  அதற்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. அந்தக் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பொறுத்​தவரையில், சசிகலா, முதல்வராக வரவேண்டுமா? யார் பொறுப்பு முதல்வர்? யார் மாற்று முதல்வர்?... என்றெல்லாம் இப்போது ஏன் பேச்சு எழவேண்டும்? முதல்வர் நாற்காலியில் ஆள் இருக்கிறபோது, அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இப்போது எதற்கு?”

தமிழக அரசியலில் சசிகலாவை முன்னிலைப்​படுத்தவேண்டும் என்று ஒரு தரப்பினர் டெல்லி பி.ஜே.பி. தலைவர்களிடம் தூது போய் அது நடக்காமல் போனதால், அவர்கள் உங்களுடன் தொடர்புகொண்டு ராகுல் காந்தியை அப்போலோவுக்கு அவசரம் அவசரமாக வரவழைத்தார்களா?”

“இதுமாதிரி கட்டுக்கதைகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அ.தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்தக் கட்சிக்குள்  யாரை  எந்தப் பதவியில் போட வேண்டும் என்பதெல்லாம் அந்தக் கட்சியினர்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர நான் அல்ல. தமிழக காங்கிரஸ் தலைவரான நான் அந்த கட்சியினருக்கு யோசனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. யாரையும் நான் சந்தித்து கட்சியை இப்படி நடத்தணும்...ஆட்சியை இப்படி நடத்தணும்..என்றெல்லாம் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். நான் அவரை சந்தித்தேன்... இவரை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதைகள்”">- ஆர்.பி, படம்: பா.காளிமுத்து

கருத்துகள் இல்லை: