புதன், 12 அக்டோபர், 2016

ஓ.பி.எஸ் நியமனம்:சந்தேகம் கிளப்பும் தலைவர்கள்!

மின்னம்பலம்,காம் :இதுவரை பொறுப்பு முதல்வர் வேண்டும் அல்லது வேண்டாம் என்றளவில் அரசியல் தளத்தில் விவாதங்கள் நடந்துவந்தநிலையில் நேற்று முதல்வர் கவனித்து வந்த துறைகளை இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று ஆளுநர் அறிவித்தார். முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலுடன் இந்த இலாகா மாற்றம் நடந்திருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்திருக்கும்நிலையில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
ஆளுநர் அறிவிப்பு வியப்பைத் தருகிறது : கலைஞர்
முதலமைச்சர் தனது இலாக்காக்களை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா?

முதலமைச்சரின் இலாகாக்களை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி கவனிப்பார் என்று ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்றவகையில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, பொறுப்பு ஆளுநர் புதிய ஏற்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்குமுன்பு, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் இந்தக் குறுகிய இடைவெளியில் முழுமையாகப் பரிசீலித்திருப்பாரா என்று எழுந்துள்ள ஐயப்பாட்டை அறவே புறக்கணித்துவிட முடியாது.
தமிழக ஆளுநர் அவர்கள் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும், இந்திய அரசியல் சாசனத்தின் 166 (3)ஆம் ஷரத்தின்படி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்றும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சரே தலைமை வகிப்பாரென்றும், இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முதல் அமைச்சரின் அறிவுரையின்பேரில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் எக்காரணம் கொண்டும் தேக்கநிலையில் இருந்திட அனுமதிக்காமல் தொடர்ந்து அரசு இயங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
கடந்த 19 நாட்களாக, முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் நீண்டநாட்கள் மருத்துவமனையிலேயே இருந்திட வேண்டும் என்றநிலையில், அவரது உடல் நிலை பற்றி அரசுத் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிக்கைகளும் இதுவரை வராத நிலையில், பல்வேறு வதந்திகள் உலவிட நேரிட்ட பிறகு தமிழக ஆளுநர் மற்றும் கேரள முதல் அமைச்சர் வரை ராகுல் காந்தி, வெங்கய்யா நாயுடு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தம்பி மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் "அப்பல்லோ" மருத்துவமனை சென்றபோது, சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரை நேரில் பார்க்கவோ, நலம் விசாரிக்கவோ வாய்ப்பு அளிக்கப்படாத சூழ்நிலையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முதலமைச்சரின் அறிவுரையின்பேரில் செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தருகிறது. ஏனென்றால் முதலமைச்சர் தனது இலாக்காக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒருசிலரிடையே எழுந்துள்ளது. மேலும் அதிமுக-வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதலமைச்சரின் கையெழுத்தை போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான பதிலும் அரசின் சார்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
செயல்படாத முதல்வர், ஆளுநர் இல்லாத மாநிலம் : விஜயகாந்த்!
"வதந்திக்கு காரணமான முதலமைச்சர் ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தந்து வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 21 நாட்களுக்குமேல் ஆகிறது. முதலில் காய்ச்சல் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும், பிறகு நுரையீரல் தொற்றுநோய் என்றும், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டும் என்றும், தினம் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. மருத்துவமனை தரும் அறிக்கையில்தான் மாற்றம் உள்ளதே தவிர ஜெயலலிதா உடல்நிலையில் எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், முதலமைச்சரின் இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செயல்படாத முதல்வரும், நிரந்தர ஆளுநரும் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி இந்த அரசு மக்களுக்காக செயல்படும் அரசாக மாற வேண்டும். தினம் ஒரு தலைவர் அப்பல்லோ மருத்துவமனைக்குச் செல்வதும் பின், வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்து முதலமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவக்குழு கூறியதாகவும் சொல்லிக் கொண்டுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை அரசியல் ஆதாயமாக செயல்படுவதாக பத்திரிகைகளில் செய்தி எழுதிக்கொண்டுள்ளனர். இதுவரை யாருமே ஜெயலலிதாவை சந்தித்ததாகவோ, ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியான சசிகலாவை சந்தித்ததாக தகவல் இல்லை. நலம் விசாரிக்கச் செல்பவர்கள் இரண்டாம் தளத்துக்கு சென்றதாகவும், அங்கு ஒருசில மருத்துவர்களையும், சில அமைச்சர்களையும் சந்தித்ததாகவும் சொல்வது வாடிக்கையாக உள்ளது. வதந்தி பரப்புவோர்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களையும், பத்திரிகையாளர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும் மிரட்டுவதைக் காட்டிலும் இந்த வதந்திக்கு காரணமான முதலமைச்சராகிய ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தந்து வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது" என்று கூறியுள்ளார்.
முதல்வர் எப்படி அறிவுரை வழங்கியிருக்க முடியும்? : ராமதாஸ்!
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவதால், இதுவரை அவர் கவனித்துவந்த துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல்வருக்குப் பதிலாக பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமையேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரால் செயல்பட முடியாத நிலையில் அரசு நிர்வாகம் தடையின்றி இயங்க செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு சரியானதே.
அதேநேரத்தில் அரசு நிர்வாகத்தில் செய்யப்படும் மாற்றங்கள் மக்கள் மத்தியில் குழப்பங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்பு மாற்றம் குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3) பிரிவின்படி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று இந்த மாற்றங்கள் செய்யப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 166(3) ஆவது பிரிவின்படி, அரசின் நிர்வாகப் பணிகள் எளிதாக நடைபெறுவதற்கு வசதியாக அமைச்சர்களின் துறைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் ஆளுனருக்கு உண்டு. ஆனால், முதல்வரின் அறிவுரைப்படி மட்டுமே இந்த மாற்றங்களை ஆளுநரால் மேற்கொள்ளப்படும். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் அறிவுரைப்படிதான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
எனினும், ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்தமுறையில் அறிவுரை வழங்கினார் என்பதுதான் தமிழகத்திலுள்ள ஏழரைக் கோடி மக்களின் மனதில் எழுந்துள்ள வினாவாகும். வழக்கமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது, அதற்கான அறிவுரைக் கடிதத்தை ஆளுனரை நேரில் சந்தித்து முதலமைச்சர் வழங்குவார். முதலமைச்சரால் நேரில் செல்ல முடியாத பட்சத்தில் தலைமைச் செயலாளர் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ ஆளுநரிடம் முதலமைச்சரின் அறிவுரை கடிதம் சேர்க்கப்பட்டு, அதனடிப்படையில் அமைச்சரவை மாற்றம் அல்லது துறை மாற்றங்கள் செய்யப்படும்.
ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இப்போது எந்தவகையிலும் ஆளுநருக்கு அறிவுரை வழங்கும் நிலையில் இல்லை என்பதுதான் அவர் மருத்துவம் பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டு வரும் மருத்துவ அறிக்கைகள்மூலம் தெரியவரும் உண்மை ஆகும். ஜெயலலிதா மிக மோசமான நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மருத்துவர்கள் தவிர, வேறு எவரும் சந்திக்கமுடியாத நிலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவிடம் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோதிலும், எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் முதலமைச்சருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும், மயக்க நிலையிலேயே இருப்பதாலும் அவரால் பேச முடியாது. அதுமட்டுமின்றி, அவருக்கு பாசிவ் பிசியோதெரபி (Passive Physiotherapy) செய்யப்படுவதால் அவரது கைகளும், கால்களும் அசைக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய நிலையில் இருக்கும் ஒருவரால் அறிவுரை வழங்கி கையெழுத்துப் போடுவதோ, தாம் நினைப்பதை தெரிவிப்பதற்காக சைகை காட்டுவதோ சாத்தியமில்லை. இத்தகைய சூழலில் முதல்வர் எப்படி அறிவுரை வழங்கியிருக்க முடியும்?
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யும் உரிமை அக்கட்சிக்கு உண்டு. அக்கட்சியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகவோ, பொறுப்பு முதலமைச்சராகவோ நியமிக்கப்படலாம். அதைத் தீர்மானிக்க வேண்டியது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்தான். ஆனால் அவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெற வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை. மாறாக, அரசியல் சட்டத்துக்கு எதிரானவகையில், இந்த நடைமுறைகளுக்கெல்லாம் சம்பந்தமில்லாத சிலர் தங்களின் விருப்பப்படி அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைக்க ஆளுநரும் இடமளித்துவிடக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
இதற்கெல்லாம் மேலாக பொறுப்பு மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, தம்மிடம் உள்ள துறைகளை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கும்படியும், அமைச்சரவையை தலைமையேற்று நடத்த அனுமதிக்கும்படியும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு அறிவுரை வழங்கினார் என்பதை தமிழக ஆளுநர் விளக்க வேண்டும். இதுகுறித்த விளக்கம் அளிக்கப்படும் வரை தமிழகத்தில் நடைபெறுவது ஐயத்துக்குரிய ஆட்சியாகவே மக்களால் பார்க்கப்படும்.

கருத்துகள் இல்லை: