வியாழன், 13 அக்டோபர், 2016

தஞ்சாவூரில் சசிகலா! அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி

மின்னம்பலம்.காம் : ‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு வேட்புமனு புதிதாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதனால், வேட்பாளர்களை மாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை மீண்டும் வேட்பாளராக அறிவித்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டது அவரது எதிரணி. தற்போதைய அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகம் கவனம்செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அங்கேயிருக்கும் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் என்று எல்லோருக்கும் தொடர்ந்து போனிலும் பேசுகிறாராம். ‘உங்களை மாதிரி நானும் சாதாரண ஒன்றியச் செயலாளரா இருந்துதான் இங்கே வந்திருக்கேன். உங்க கஷ்டம் எனக்குப் புரியும். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க...’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.
அமைச்சரின் போனுக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் என்கிறார்கள். அதனால், மீண்டும் அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் ஜெயிப்பது அதைவிட சிரமம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் என்று, நான் அன்று சொல்லியிருந்தேன். தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்குமுன்பு அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது.’’
அக்டோபர் 4ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இருந்து....
"உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அநேகமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை உடனே அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. அதாவது, உள்ளாட்சிக்கு முன்பு அந்தத் தேர்தல் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்."
அக்டோபர் 8ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இருந்து...
‘‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழகமே அவரது உடல்நிலை பற்றி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர்களிடம் தம்பிதுரை பேசியிருக்கிறார். 'தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் அறிவிப்பு சீக்கிரம் வரப்போகுது. பூத் கமிட்டியில் யாரெல்லாம் போடலாம் என்ற லிஸ்ட் உடனடியாக கொடுங்க... ' என்று சொல்லியிருக்கிறார். விறுவிறுவென வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். கரூர் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தனது தொகுதியில் உள்ள முக்கிய நபர்களின் பட்டியலை தலைமைக்கு அனுப்பிவிட்டாராம்!"
சரி... மேட்டருக்கு வர்றேன். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. அடுத்த வாரம் அறிவிப்பு வந்தால், அதிலிருந்து ஒரு மாதத்துக்குள் தேர்தல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் உள்ளாட்சிக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் என்பது உறுதியாகி இருக்கிறது” என்ற மெசேஜ் வந்து விழுந்தது.
“சூப்பர். சொன்னதெல்லாம் நடக்குது!’’ என்று பூங்கொத்து சிம்பல் ஒன்றைத் தட்டியது ஃபேஸ்புக். தொடர்ந்து வாட்ஸ் அப் அடுத்த மெசேஜ் அப்டேட் கொடுத்தது.
“ஒரு காலத்தில் கார்டனுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வந்தார் செந்தில்பாலாஜி. ஆனால் திடீரென ஒரு நாள் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. பட்டிமன்றம் வைக்காத குறையாக கட்சிக்காரர்கள் மத்தியில் விமர்சனம் கிளம்பியது. ஆனால் என்ன காரணத்துக்காக செந்தில்பாலாஜி டம்மியாக்கப்பட்டார் என்பதுபற்றி யாரும் வாய் திறக்கவே இல்லை. செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பதவி பறிக்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் மீண்டும் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு தேடிவந்தது. அவர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் ஆனார். தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது.
அதற்குப்பிறகு செந்தில்பாலாஜிக்கு பல சிக்கல் வந்தது. அவருக்கு மீண்டும் அரவக்குறிச்சி கிடைக்காது என ஒரு தரப்பும், கிடைக்கும் என ஒரு தரப்பும் சொல்ல ஆரம்பித்தனர். கடைசியாக, இளவரசியின் மகன் விவேக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தபோது அங்கே சென்று, சசிகலாவுடன் பேசினார் செந்தில்பாலாஜி. அதில் சமாதானம் ஆனாரா சசிகலா என்பது தெரியவில்லை. இதற்கிடையில், அரவக்குறிச்சி தொகுதியில் முன்பு போட்டியிட்டுத் தோல்வியடைந்த செந்தில்நாதன் பெயரும் பலமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. இதுதவிர, போட்டியில் சிலர் இருந்தாலும் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது புதிதாக ஒரு வேட்பாளரை அறிவித்தால் அதில் சிக்கல் வரும் என நினைக்கிறார் சசிகலா. அதனால் ஏற்கனவே அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில்பாலாஜி அல்லது முன்னாள் வேட்பாளரான செந்தில்நாதன் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். தஞ்சாவூரில் ஏற்கனவே ரெங்கசாமி நிறுத்தப்பட்டார். ஆனால் தஞ்சாவூரில் சசிகலா போட்டியிடுவார் என அதிமுக-வில் ஒரு தகவல் பரவி வருகிறது. சசிகலாவைப் பொருத்தவரை, இந்தச் சூழ்நிலையில் போட்டியிடுவது சரியாக இருக்காது என நினைக்கிறார். ஆனால் சசிகலாவின் நாத்தனார் வனரோஜா மறைவுக்கு இளவரசி மகன் விவேக் தஞ்சாவூர் போய்விட்டு வந்தபிறகு சசிகலா, தஞ்சாவூரில் நிற்பது தொடர்பாக யோசிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். தஞ்சாவூரில் நடராஜனுடன் இதுதொடர்பாக விவேக் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல். நடராஜன் கொடுத்த சில அட்வைஸ்களை அத்தை சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் விவேக். ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்து சசிகலா அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்கிறார்கள்.” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: