புதன், 12 அக்டோபர், 2016

அதிமுக அதிகார பத்திரிகையில் சசிகலா புஷ்பா மீது சேறு வீச்சு !

அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரும் உயரத்துக்குச் சென்றவர் சசிகலா புஷ்பா. இவர் சில மாதங்களுக்கு முன் திருச்சி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார், இதனால் தனக்கு அ.தி.மு.க-வில் நல்ல பெயர் கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் கிடைத்ததோ கட்சிப் பதவி பறிப்பு.
ஜெயலலிதா, தன்னை அறைந்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே, அனைவர் முன்னிலையிலும் கூறினார். சசிகலா புஷ்பாவுக்கு அ.தி.மு.க-வால் போதாத காலம் ஆரம்பித்தது. சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த இளம்பெண் பானுமதி மற்றும் அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய 2 பேரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினரால் தங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது, பண மோசடி வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் சசிகலா புஷ்பா மீது பாய்ந்தன. அதேசமயம் சசிகலா புஷ்பாவும், 'ஜெயலலிதாவால் எனக்கு பெரிய ஆபத்து இருக்கிறது' என்று போலீஸில் பதிலுக்கு புகார் செய்தார். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 20 நாட்களுக்குப் பின்னரும்  எந்த தகவலும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுவரை எந்த அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, அவ்வளவு ஏன் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்துக்கே யாரும் செல்ல முடியாத சூழல் உள்ளது.
கடந்த, இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலா புஷ்பா, "அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்கூட, முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. அப்படியானால் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது யார்? முதல்வருடன் மருத்துவமனையிலேயே தங்கியுள்ள சசிகலாதான் அதிகாரிகளுக்கு கட்டளை இடுகிறாரா? எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் எப்படி அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியும்?. இங்கு நடப்பது ஒன்றும் மன்னராட்சி இல்லை. ஜனநாயக நாட்டில், தனி நபர்களால் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மேலும் ஜெயலலிதாவைச் சுற்றி மிகப்பெரும் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவை வெளிவராமல் பதுகாக்கப்படுகின்றன. இதுகுறித்து பிரதமர் உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணை நடத்துவதுடன், மக்களுக்கு உண்மை நிலையைச் சொல்லவேண்டும்" எனக் கூறினார்
இதையடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையில் "சாக்கடை புஷ்பாவின் 'பூக்கடை' சமாச்சாரங்கள்!" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "எச்சையே உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? ஆனால் பகையாளியோடு உறவாடி, கூர் தீட்டிய மரத்துக்குக் குந்தகம் செய்கிறது, நன்றி கெட்ட உன் நடத்தை. போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்... என்பதுதான் பொழுதெல்லாம் உன்கூலி பிழைப்பு..." என்று, ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரையில் உனது பழைய பூக்கடை சமாச்சாரங்களை நீயாகவே முன்வந்து தோண்டி எடுக்கச் சொல்கிறாய்" என்பது போன்ற ரீதியில் சசிகலா புஷ்பாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து, கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ளது.
'நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையில் இதுபோன்றதொரு  கட்டுரை வந்திருக்கிறது என்றால், அ.தி.மு.க-வினருக்கு சசிகலா புஷ்பாவின் பழைய பூக்கடை சமாச்சாரங்கள், அதாவது போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன், போன்றவை பற்றியெல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். சசிகலா புஷ்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், அவரை ஏன் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்? எதற்காக மேயர், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள்  கொடுக்கப்பட வேண்டும்?
தற்போது சசிகலா புஷ்பா யாரையோ பகைத்துக்கொண்டதால், அவருக்கு எதிராக வழக்குகள் போடுவதும், மிரட்டுவதும், பதிலுக்கு அவர் அறிக்கை விடுவதும், பேட்டி கொடுப்பதும் தேவைதானா? சசிகலா புஷ்பாவின் பின்னணியில் இருந்து செயல்படுவது யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியாது.
அ.தி.மு.க.-வில் யார் வேண்டுமானாலும், உயர் பதவிக்கு வரலாம் என்ற  நிலையில், தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்குவதும், பின்னர் அவர்களுக்கு எதிராக, இதுபோன்று சேற்றை வாரித் தூற்றுவதும்தான் அ.தி.மு.க-வின் நாகரிகமா?  விகடன்,காம்

கருத்துகள் இல்லை: