வெள்ளி, 11 அக்டோபர், 2013

செல்போன் வைத்திருந்ததால் கல்லால் அடித்து கொல்லப்பட்ட பெண்


பாகிஸ்தானில் இருக்கும் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில், தேராகாஸிக்கான்
என்ற மாவட்டத்தில் இருக்கும் கிராமத்துப் பெண் அரஃப்பா பீவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. கடந்த ஜூலை மாதம் அவளது துணிமணிகளுக்கு இடையே ஒரு செல்போனை அவளது குடும்பத்தில் இருந்த ஆண்கள் பார்த்தனர். ‘ஒரு பெண்ணிடம் மொபைல் போனா?’ என்று அதிர்ச்சியடைந்த அவர்கள், விஷயத்தை ஊர் பஞ்சாயத்துக்குத் தெரிவித்தனர்.
பஞ்சாயத்தாருக்கும் அதிர்ச்சி. ‘பெண்ணிடம் செல்போனா? இந்தப் பாவியை சாகும்வரை கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’ என்று தண்டனை வழங்கினர். அதோடு, இந்தத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பையும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமே ஒப்படைத்தனர்.
இதையடுத்து,  அரஃப்பா பீவியை  ஊருக்கு வெளியே ஒரு மைதானத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கே அவரது உற்றார், உறவினர்கள் என்று அத்தனை பேரும் அந்தப் பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு கருங்கற்களை அவள் மீது வீச ஆரம்பித்தனர்  சாகும்வரை  துடிக்கத் துடிக்க அடித்தே கொன்றனர். அவளது  குழந்தைகளுக்குக்கூட  உடலைக் காட்டாமல், அங்கேயே புதைத்தனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட போலீஸார் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தி எஃப்.ஐ.ஆர். போட்டனர். ஆனால், யாரையும் கைதுசெய்யவில்லை. தீவிரவாத அமைப்புகளும் கட்டப்பஞ்சாயத்துகளும் தலைவிரித்தாடும் பகுதிகளில் இந்த மாதிரி வழக்கம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. பாகிஸ்தான் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான், ஈரான், சோமாலியா… என்று கிட்டத்தட்ட 15 நாடுகளிலும் இந்தக் கொடூரமான தண்டனை வழக்கத்தில் இருப்பதால், உலகம் முழுவதும்  இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்தப் பிரச்னையை ஐ.நா. சபை வரை எடுத்துச் சென்றுள்ளனர்.  ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: