வியாழன், 10 அக்டோபர், 2013

அன்பழகனை ஓவர்டேக் செய்ய ஸ்டாலின் முயற்சி ? கலைஞர், கனிமொழி கடும் எதிர்ப்பு ?

உடல் நலம் குறைவினால், வீட்டில் ஓய்வு எடுத்து வரும் தி.மு.க., பொதுச்
செயலர் அன்பழகனின் பதவியை பொருளாளர் ஸ்டாலினுக்கு வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "அன்பழகனின் பதவியை தொடர்ந்து நீட்டிக்க வைக்கும் தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலர் அன்பழகனை விட, தலைவர் கருணாநிதி ஒரு வயது இளையவர் என்றாலும், கட்சி ரீதியாக முக்கிய முடிவு எடுக்கும் முன், அன்பழகனிடம் கருணாநிதி ஆலோசனை செய்வது வழக்கம். இருவரும், நெருங்கிய நண்பர்களை விட, உடன்பிறவாத சகோதாரர்களாக விளங்கி வருகின்றனர்.


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அன்பழகன் பேசுகையில், 'எனக்கு முன் கருணாநிதி இறந்து விட்டால், இந்த கட்சியை நான் வழிநடத்தி செல்வேன். கருணாநிதிக்கு முன் நான் இறந்து விட்டால், அவர் வழி நடத்தி செல்வார். இருவரும் உயிரோடு இருக்கும் வரை, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விடாமல், கட்சிக்காக பாடுபடுவோம்' என்றார்.

ஆனால், இன்று அன்பழகனின் உடல் நலத்தை காரணமாக காட்டி, அவரிடமுள்ள பொதுச்செயலர் பதவியை, பொருளாளர் ஸ்டாலினுக்கு வழங்கவும், ஸடாலின் வகித்த பொருளாளர் பதவியை, இரண்டாம் கட்டத்தலைவர்கள் சிலர் கைப்பற்றவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பொதுச்செயலர் பதவியை அன்பழகனிடமிருந்து பறிப்பதற்கு, கருணாநிதிக்கும், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழிக்கும் விருப்பமில்லை. "அன்பழகனிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற்று விடக் கூடாது. அவர் உயிரோடு இருக்கும் வரை, பொதுச்செயலர் பதவியில் அவர் தான் நீடிப்பார்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வரும், டிசம்பர், 1ம்தேதி நடைபெறவுள்ள தி.மு.க., பொதுக்குழுவில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கேட்டு, தொடர்ந்து கட்சியின் தலைவராக கருணாநிதியும், பொதுச் செயலராக அன்பழகனின் பதவியை நீட்டிப்பதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி நிர்வாகத்தில், எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பு இல்லை என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது நிருபர்

கருத்துகள் இல்லை: