சனி, 27 ஏப்ரல், 2013

எந்தவித நல்ல குணங்களும் இல்லாமல் ஆனால் எல்லா வித நல்ல குணங்களும் இருபது போல பாவனை ! அதாங்க சுஜாதாவின் .....

சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்!

 இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. அவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள்; பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகரியங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.
பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களைத் தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்பச் சற்று மாற்றிக்கொள்பவர்கள். சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள்… இந்த மவுனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு.
மத்யமர் (நடுத்தரவர்க்கம்)”
என்ற பீடிகையுடன் ‘கல்கி’ இதழில் ஏப்ரல் மாதம் முதல், வாரம் ஒரு சிறுகதை எழுதுகிறார் சுஜாதா. இதுவரை 8 சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
ஒவ்வொரு கதையின் மீதும் வாசகர் கடிதங்களைப் பிரசுரித்து அதற்குப் பரிசும் கொடுக்கிறது கல்கி. தோற்றத்தில் நடுத்தர வர்க்கத்தை எள்ளி நகையாடுவதைப் போல அமைந்திருக்கும் இந்தக் கதைகளை பெரும்பாலான வாசகர்கள் பாராட்டுகிறார்கள்.
தன்னுடைய வர்க்கம் கேலிக்குள்ளாக்கப்டுவதைக் கண்டு சீறாவிட்டாலும் சீராட்டுகிறார்களே இந்த வாசகர்கள். இது விநோதமாகவல்லவா இருக்கிறது! –என்பது ஒரு கேள்வி.
தன்னுடைய எழுத்தைத் தின்று தனக்குச் சோறு போடும் தன்னுடைய வர்க்கத்தையே சுஜாதா கேலி செய்கிறாரே, இதுஎப்படி. ஏன்?
பார்ப்பன, மேல்சாதி நடுத்தர வர்க்கத்தைமட்டுமே நம்பி நடத்தப்படும் கல்கி இதழ் இத்தகைய கதைகளை ஏன் பிரசுரிக்கிறது?
இப்படிப் பல கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு சுஜாதாவின் கதைகளுக்குள் நாம் செல்ல வேண்டும். வாசகர்கள் அனைவருமே இவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அக்கதைகளின் சுருக்கத்தை முதலில் பார்ப்போம்.

ஒரு கல்யாண ஏற்பாடு
அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐயங்கார் பையனுக்கு அவனுடைய பெற்றோர் சென்னையில் பெண் பார்த்துப் பேசி முடிப்பதுதான் கதை. ‘மணமகள் தேவை’ விளம்பரத்தின் மூலம் அதே சாதியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் பெண் பார்க்கப் போகின்றனர் பையனின் பெற்றோர். பரஸ்பர பேச்சுவார்த்தைகளில் போலித்தனம் பொங்கி வழிகிறது. வரதட்சிணையும் இன்ன பிறவும் மிகவும் நாசூக்காகப் பேசி முடிக்கப்படுகின்றன. பெண் பார்க்கும் படலத்திற்கு புடவை கட்டிவந்த பெண் பையனின் பெற்றோர் கிளம்பும் போது சட்டை பாண்ட் போட்டிருக்கிறாள்.
வீட்டிற்கு வந்தபின் பையனின் அம்மா தன் கணவனிடம் “சுரேஷூக்கு கச்சிதமா பொருந்தும். அமெரிக்கால ஃபேஷனா இருக்கறதுக்கு தோதுப்படும்.”
“அதை அவர்கிட்ட சொல்ல வேண்டாமா?” கணவன்
“எதை”
“அமெரிக்காவிலே உன் பையன் நீக்ரோ பெண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு டைவோர்ஸ் வாங்கினதை!”
“நீங்க பேசாம இருங்கோ. அது முடிஞ்சு போன கதை!”
பெண்ணின் தந்தை தன் மனைவியிடம்.
“அதைஅவாகிட்ட சொல்ல வேண்டாமா?”
எதை?”
“டெல்லியில ஒரு மாசம் உம்பொண்ணு அந்த பஞ்சாபிப் பையனோட…”
“நீங்க பேசாம இருங்கோ. அது முடிஞ்சு போன கதை….”
புது மோதிரம்
நவ நாகரீகத்தின் வாசனைகளுடன் வளர்க்கப்பட்டு அடுப்படி வாசனைக்கு வாழ்க்கைப்பட்ட நடுத்தர வர்க்கப் பார்ப்பனப் பெண் பத்மா தன் மகளை சினிமா நடிகையாக்க முயற்சிப்பது கதை. கணவனும் மனைவியும் மகளுடன் சினிமா இயக்குனரை அவரது நட்சத்திர ஓட்டல் அறையில் சந்திக்கிறார்கள். மகளுக்கு இணையாகத் தாயும் இளமையாக இருப்பதை பேச்சுவாக்கில் கொஞ்சம் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார் இயக்குனர். மகளை எப்படியாவது நடிகையாக்கிப் பார்க்க அவளுக்குள்ள வெறியை மனதில் குறித்துக்கொள்கிறார்.
அடுத்த முறை தன்னை சந்திக்க வரும் பத்மாவிடம் “உங்க விருப்பமில்லாம நான் எதுவும் செய்ய விரும்பலை. உங்களுக்கு இஷ்டம்னா கதவை உள்பக்கம் சாத்திக்கலாம். இல்லை. கதவு திறந்தே இருக்கு” என்று ‘கவுரவமாக’ தன் விருப்பத்தை வெளியிடுகின்றார் இயக்குனர். மகளை எப்படியும் நடிகையாக்கி விடுவது என்று முடிவு செய்கிறாள் பத்மா.
தர்ட்டி ஃபார்ட்டி
நஞ்சுண்டராவ் ஒரு பெங்களூர்வாசி. பெங்களூர் நகர வளர்ச்சிக் குழுமத்திலிருந்து மனை ஒதுக்கித் தருவதாக அழைப்பு வருகிறது. வரிசைப்படி மனை கிடைக்க பல வருடம் ஆகுமென்றும வேறு ஒரு பார்ட்டியிடமிருந்து குறைந்த விலையில் மனை ஒன்று வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டுகிறான் வளர்ச்சி குழும குமாஸ்தா சிவண்ணா. மனையையும் காட்டுகிறான்.
பிராவிடண்டு ஃபண்டு லோன் வாங்கி, மனைவியின் நகையை அடகுவைத்து, பெண் கல்யாணத்துக்கு சேமித்த தொகையையும் சேர்த்து அறுபதாயிரம் ரூபாயை சிவண்ணாவிடம் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு மனைக்குப் போனால் அங்கே வேறொருவர் வேலி கட்டிக் கொண்டு இருக்கிறார. பார்த்த மனைக்குப் பக்கத்து மனைதான் வாங்கிய மனை. வாங்கிய மனையின் மையத்தில் ஒரு குன்று. பணம் திரும்ப வராது. கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காது.
“நஞ்சுண்டராவின் சுவாச மூக்கு துடித்து பெரிதாக மூச்சு விடத் தொடங்கினார். முகம் சிவந்து கைநடுங்க அந்த சிவன்ணாவை…. சிவண்ணாவை அப்படியே ஒரு கடப்பாரையை எடுத்து அவன் மண்டையைப் பிளந்துரணும்”
மறுநாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய உடனே கடப்பாரையுடன் வெளியே கிளம்புகிறார் நஞ்சுண்டராவ். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்டு நடுங்கி அவரது மனைவியும் நண்பர்களும் அவரைத் தேடிக் கிளம்பும் நேரத்தில் கையில் கடப்பாரை, கிழிந்த சட்டையுடன் எதிர்ப்படுகிறார்.
“அய்யோ, ஏன் இப்படி மிரள மிரளப் பார்க்கிறீங்க? என்ன பண்ணீங்க?” மனைவி.
“அந்தப் பாறைய கடப்பாறையால் தட்டிப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா ஒடச்சுரலாம். நாளையிலேர்ந்து நீயும் வா கோதாவரி ஒத்தாசைக்கு. ரெண்டு பேருமா சேர்ந்துண்டு உடைச்சுரலாம்”
அறிவுரை
லஞ்சம் கதவைத் தட்டுகிறது பஞ்சம் ‘கதவைத் திற’ என்று கிசுகிசுக்கிறது. நெஞ்சம் தடுமாறுகிறது. தயக்கத்துடன் கதவைத் திறக்கிறது கதை.
ஒரு பைசா லஞ்சம் வாங்காமல், ஆபீஸ் ஜீப்பை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தாமல், கஷ்டப்பட்டும் நேர்மையாக வாழ்ந்த தந்தையின் மகன் என்ற முறையில் தீயாய் இருக்கிறான் ராமலிங்கம். அவன் மனைவி ராமலிங்கத்தையும் லஞ்சம் வாங்கச் சொல்கிறாள்.
ராமலிங்கத்திற்கு மனப்போராட்டம், அப்பாவை சந்திக்கச் செல்கிறான்.
“ஒரு ஆளு பில்லு பாஸ் பண்ணினா எழுபதாயிம் தர்றதாச் சொல்றான்… நான் கடன்லே இருக்கேன். மீனாட்சி வாங்கு வாங்குன்னு போட்டு உலுக்கறா… ஆனா லஞ்சம் வாங்க இஷ்டமில்லை. உங்களப் பத்தி நெனப்பு வர்றது. எப்படிப்பா சமாளிச்சீங்ங்க?… எப்படி உங்களுக்கு அத்தனை மனபலம் இருந்திச்சு? அந்த ரகசியத்தைச் சொல்லுங்கப்பா.”
அப்பா சற்றுநேரம் மௌனமாக இருந்தார். “சொல்றேன் கிட்ட வா” என்றார். மெல்லக் குரலை தாழ்த்தி “லஞ்சம் வருதுன்னா வாங்கிடு” என்றார்.
“என்னப்பா சொல்றீங்க?” என்றான் ராமலிங்கம் அதிர்ச்சியடைந்து.
“ஆமாடா… நான் வாழ்நாள் முழுதும் லஞ்சம் வாங்காம என்னத்தைக் கண்டேன். பரம்பரை வீட்டை வித்துட்டு புதுசா வீடு கட்டி முடிக்காம ஒழுகுது. உங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியலை. இத்தனை பேர் இருக்கீங்க. மகனுக, மகளுக, யாரும் என்னைத் தீண்டறதில்லை. நீயே கடைசியா பாரு! மூணு வருஷம்! எங்கிட்ட மட்டும் லஞ்சம் வாங்கிப் பணம் காசு இருந்தா இப்படி உதாசீனம் பண்ணுவீங்களா? சொல்லுப்பா. அந்தக் கதி உனக்கு வராமலிருக்க வாங்குப்பா. தாராளமா வாங்கு . உன் பொண்டாட்டி சொல்றதுதான் சரி. வாங்கு.”
ஜாதி இரண்டொழிய:
பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் அதிகாரி நரசிம்மன் ‘தகுதியுள்ள’ உயர் சாதிக்காரர்களுக்கு வேலை தரமுடியாமலும், ‘தகுதியற்ற’ தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை தரவேண்டிய சூழ்நிலையையும் எண்ணிப் பொருமுவதுதான் கதை.
அந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தவர்களில் ரமேஷ் எல்லாவற்றிலும் உயர் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்திருந்தும் வேலை கிடைக்காத, ஒரு மகன்; நான்கு சகோதரிகளுக்குத் திருமணம் செய்து தரவேண்டிய பொறுப்பில் உள்ளவன். இருந்தும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து ஒன்றை அவனுக்கு ஒதுக்கி வேலைதர அரசு விதியும், தேர்வுக்குழுவில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரியும் தடையாய் இருக்கிறார்கள்.
அடுத்து வந்த ஷீலாவிடம் பெயருக்கு சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாகரிக மிதப்பும், பணிவின்மையும், தகுதியின்மையும் காரணமாக அவளுக்கு வேலை தரவேண்டாமென்று நினைக்கிறார் நரசிம்மன்.
அவள் போனதும் “வாட் டு யு ஸே மிஸ்டர் சித்தார்த்தன். இவளுக்கு வேலை கொடுக்க வேண்டுமா?” என்றார் நரசிம்மன் .
“ஏன் அதில் என்ன சந்தேகம்?”
“இந்தப் பெண் பாக்வார்டு கிளாஸா? தந்தை சென்ட்ரல் கவர்ன்மென்ட் லாபில் டைரக்டர். ஸ்விட்ஸர்லாந்து எல்லாம் சுற்றிவிட்டு வந்திருக்கிறாள்.”
சித்தார்த்தன் “அந்தப் பெண்ணின் காஸ்ட் சர்டிபிகேட்டைப் பாருங்கள்” என்றார். ஷீலாவின் பெயருக்கெதிரில் ஸூட்டபிள் என்று எழுதிக் கையெழுத்திட்டார் நரசிம்மன். அவர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து காரில் கிளம்பும்போது ரமேஷ் முனிசிபல் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். ஷீலா தன் தந்தையின் அலுவலகக் காரில் கிளம்பிச் சென்று கொண்டிருந்தாள்.
சாட்சி:
மளிகைக் கடைக்கும், கோயிலுக்கும் போவதைத் தவிர வேறு எந்தவிதத்திலும் சமூகத் தொடர்பு இல்லாத சரளா என்ற இளம் மனைவி ஒருநாள் மளிகைக்கடைக்கு கடுகு வாங்கப் போனபோது கண்ணெதிரே இரண்டு ரவுடிகள் பெட்டிக் கடைக்காரரைக் கொல்வதைப் பார்த்து விடுகிறாள். பீதியடைந்து வீட்டுக்கு ஓடுகிறாள். மாமியார், மாமனார், கணவன், மைத்துனன் அனைவரும் கூடி யோசனை செய்கிறார்கள்.  போலீசு வரும்போது என்ன பதில் சொல்வது என்பதே பிரச்சினை.
“ஒன்றுமே தெரியாது என்று சொன்னால் போலீசு விரோதம்; சாட்சி சொன்னால் ரவுடி விரோதம்; பேசாமல் வீட்டைக் காலி செய்துவிடலாம்” –என்று பல யோசனைகள். கடைசியில், மளிகைக் கடைக்குப் போனேன். ஆனால் கொலையைப் பார்க்கவில்லையெனச் சொல்வது என்று முடிவாயிற்று.
சப்-இன்ஸ்பெக்டர் வருகிறார். கேட்கிறார். எல்லா திட்டங்களும் தவிடுபொடியாக சரளா தான் பார்த்ததைப் பார்த்தபடியே விளக்குகிறாள்.
நீலப்புடவை, ரோஜாப்பூ:
மோகனரங்கம்-பத்மாவின் 18 வருட மணவாழ்க்கையில் சிறிது சிறிதாக இடைவெளி விழுந்து கடைசியில் அவர்கள் அன்றாடம் பேசிக் கொள்வதே எண்ணி சில வார்த்தைகள்தான் என்று ஆகிவிட்டது. சண்டையோ, விரோதமோ இல்லை. மெதுவாக அதிகரித்துவிட்ட இடைவெளி. இப்படிப்பட்டவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்த பேனா நண்பர்களை அறிமும் செய்யும் ஒரு அமைப்பை மோகனரங்கத்துக்கு சிபாரிசு செய்கிறான் சுதர்சன். பேனா நண்பராகக் கிடைத்த ஒரு பெண்ணும் மோகனரங்கமும் தங்கள் பிரச்சினைகளை, விருப்பு வெறுப்புகளை கடிதம் மூலம் பரிமாறிக் கொள்கிறார்கள். பேனா நண்பர்கள் சந்திக்கக் கூடாது என்ற விதியை மீறி சந்திக்க முடிவு செய்கிறார்கள். இவன் நீலச்சட்டையிலும் அவள் நீலப்புடவையிலும் கையில் ரோஜாவுடன் பூங்காவில் சந்திக்க ஏற்பாடு. குறிப்பிட்ட நேரத்தில் அவள் பூங்காவின் ஒரு வாயிலிலும் அவன் மறுவாயிலிலும் காத்திருந்து சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். நேர்ந்துவிட்ட தவறினால் சோர்ந்து போய் வீடு திரும்பும் மோகனரங்கம் தற்செயலாய் மனைவியின் அறையைப் பார்க்கிறான். அங்கே அவளது கட்டிலின் மேல் நீலப்புடவையும் ஒரு ரோஜாவும்.
மற்றொருத்தி:
தன் கணவன் சின்னவீடு வைத்திருப்பதாக தம்பி சுப்புராஜூ சொன்னபோது சாரதாவுக்கு அதிர்ச்சிக்குப் பதில் வருத்தமே மேலிட்டது. ஆனால் என்ன செய்வது என்ற கேள்விதான் அவளை அலைக்கழித்தது. “தனியாக வாழ முடியுமா என்னால்?” –தன் மாமனார் மாமியாரிடம் சென்று முறையிட முடிவு செய்தாள். மாமனார் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில். மாமியாரிடம் சுமையை இறக்கினாள். “எனக்கு ஒரு வழி சொல்லுங்க” என்று கேட்டாள்.
மாமியாரோ எல்லா ஆண்களும் ஆடி அடங்கிச் சாயும்போதுதான் மனைவிக்கு விசுவாசமாக இருப்பார்களென்றும் தன்னுடைய அனுபவமும் அதுதான் என்றும் புத்திமதி சொல்லி அனுப்புகிறாள்.
****
மத்யமர்
2010 – உயிர்மையின் சுஜாதா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள்
ல்கியால் ‘வாசகர்கள்’ என்றும், சுஜாதாவால் ‘விசிறிகள்’ என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் ‘மார்க்கெட்’ என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பீற்றிக் கொள்ளும் ஒழுக்க நெறிமுறைகள் நாளாக ஆகத் தேய்ந்து கட்டெறும்பாகி வருகின்றன. மத்யமரும் மத்தியம வர்க்கத்தின் பிரதிநிதியுமான சுஜாதா இதைத்தான் சித்தரிக்கிறார்.
ஆளும் வர்க்கத்தின் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் செல்லப்பிள்ளையாகவும் இருந்து ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் சேர்த்து, மிகுந்த தேர்ச்சி நயத்துடன் நடுத்தர வர்க்கம் தயாரித்துக் கொடுத்த நல்லொழுக்க நெறிப்பட்டியலை ‘காலத்திற்கொவ்வாதது’ என ஆளும் வர்க்கம் புறங்கையால் தள்ளுகிறது. ‘நான் கை நீட்டும் திசையில் தான் சொர்க்கம் இருக்கிறது; நான் நடப்பது தான் அதற்குண்டான பாதை; நான் அதற்குக் கையாளும் தகிடுதத்தங்கள்தான் காலத்திற்கேற்ற தருமம்” என்று மிட்டாதாரைப் போல ஆளும் வர்க்கம் முன்னே நடக்ககிறது. அடைப்பக்காரனைப் போல நடுத்தர வர்க்கம் பின்னால் ஓடுகிறது.
கண்மண் தெரியாத இந்த ஓட்டத்தில் நீதி, அநீதி, நியாயம், அநியாயம், ஒழுக்கம், கற்பு, நேர்மை, நன்றி, வீரம், தியாகம், பாசம், காதல் என்று ஆயிரம் கற்கள் கொண்டு நடுத்தர வர்க்கம் கட்டிய நல்லொழுக்க நெறிமுறைக் கோட்டை இடிந்து தவிடு பொடியாகி புழுதியாய் பறக்கிறது. இப்படி ஓட விரும்பாத சிலர் நின்றுவிட்டார்கள். பலர் ஓட முடியாததால் அங்கலாய்க்கிறார்கள். ஓடுபவர்கள் ஓட்டத்தினூடே ‘ஆத்மசோதனை’ செய்கிறார்கள். இத்தகையதொரு ஆத்ம சோதனைதான் சுஜாதாவின் ‘மத்யமர்’.
கல்யாண ஏற்பாடு கதையின் பெற்றொர்களின் போலிப் பகட்டு, நிற்குமிடத்தில் நிறைவு கொள்ளாத நடுத்தர வர்க்கத்தின் மேலேறத் துடிக்கும் நிரந்தரமான வெறியைக் காட்டுகிறது. அந்தஸ்து விஷயத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் ஒழுக்கம் என்று வரும்போது, இருப்பதை இல்லாதது போலக் காட்டிக்கொள்வது தான் விநோதம்! தனது மகன் ஏற்கனவே ஒரு கருப்பின பெண்ணை மணந்து விவாகரத்து செய்ததை வெளிப்படையாகச் சொல்லவும், தனது பெண் ஒரு பஞ்சாபி இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்ததைச் சொல்லவும் பிள்ளையின் பெற்றோரையும் பெண்ணின் பெற்றோரையும் தடுத்தது எது? திருமணத்திற்கு முன் உறவு கூடாதென்ற தங்களது பழைய மதிப்பீட்டின் மீது உள்ள நம்பிக்கையா? இல்லை. நம்பிக்கை, நாணயமான நடவடிக்கையையல்லவா கோருகிறது! இந்த நம்பிக்கைத் துரோகத்தின் காரணம் பழைய மதிப்பீடுகளைப் பெருங்காயப் பாண்டமாக வைத்துக் கொள்ளும் போலித்தனம். சக மனிதனை ஏய்ப்பது குறித்து சிறிதும் குற்றவுணர்வு கொள்ளாத ஒரு முதலாளியின் வியாபார நீதி.
புது மோதிரம் கதையின் தாய்க்கு தான் சோரம் போவது குறித்து கணவனை ஏமாற்றுகிறோம் என்ற உறுத்தல் சிறிதும் இல்லை. பகட்டான வாழ்க்கை எனும் கனவு மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிகிறது. அந்தக் கனவை நனவாக்கிக்கொள்ள நனவுலகின் எந்த விதிமுறைகளையும் மீற அவள் தயார். கடந்த பத்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கட்டியிருக்கும் நுகர்ப்பொருள் ஜிகினா வேடத்தில் மயங்கி வரும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிதான் பத்மா. நிர்வாக இயலின் தாரக மந்திரமான ‘காரியங்களை சாதிப்பது’ (To Get Things Done) அதற்கான வழி முறைகளுக்கு பூரணசுதந்திரம் வழங்குகிறது. லஞ்சம், மோசடி எந்த ஆயுதத்தையும் பிரயோகித்து காண்டிராக்டைப் பெறுபவன்தான் திறமையான நிர்வாகி. ஒழுக்கம், விதிமுறைகள் போன்ற அநாவசியமான வேகத்தடைகளை முதலாளிகள் விரும்புவதில்லை. மகளைக் கதாநாயகியாக்கிப் பார்க்கத் துடிக்கும் தாய்க்கு கற்பு, ஒழுக்கம் போன்றவை கூட வேகத்தடைகளாகிப் போனதில் வியப்பில்லை.
தர்ட்டி பார்ட்டி நஞ்சுண்டராவ் நடுத்தர வர்க்கத்தின் இயலாமையின் பிரதிநிதி. ஏமாந்த பின் என்ன செய்வது? கோபத்தை மனைவி மீது அல்லது குழந்தைகள் மீது காட்டலாம். இரண்டையும் செய்ய விரும்பாத நாணயமிக்க கோழையான நஞ்சுண்டராவின் கடப்பாரை, பாறை மீதுதான் வேகத்தைக் காட்டுகிறது: ஆயிரக்கணக்கான சிவண்ணாக்கள் – நடுத்தர வர்க்கம் என்ற முறையில் நஞ்சுண்டராவின் உறவினர்கள் – அதிகார வர்க்க மலையாக இறுகியிருக்கிறார்களே அந்த மலையின் மீது, பாறையை வேண்டாம் பார்வையைத் திருப்பக் கூட நஞ்சுண்டராவால் முடியாது. ஏனென்றால் தனது காணிநிலம், தென்னை மரத்துக்கு அப்பால், தனது காம்பவுண்டு சுவருக்கு வெளியே உலகம் என்று சென்று இயங்கிக் கொண்டிருப்பதையே நடுத்தர வர்க்கம் அங்கீகரிப்பதில்லை. கண்டுகொள்வதுமில்லை. நஞ்சுண்டராவின் கடப்பாறை அவரது பிளாட்டுக்கு வெளியே நிச்சயம் போகாது.
லஞ்சம் வாங்கு என்ற அறிவுரை சொல்லும் ராமலிங்கத்தின் தந்தை இன்றைய நரை விழுந்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. உலகம் கெட்டுப் போனது பற்றி அவர்கள் பிரலாபிப்பார்கள். உலகத்தை மேலும் கெடுப்பதா அல்லது தன் பங்குக்கு மட்டுமாவது கெடுக்காமலிருப்பதா என்று வாரிசுகள் கேள்வி கேட்கும் போது ஊரோடு ஒத்து கெடுக்கும்படி உபதேசம் செய்வார்கள். சமூக நோக்கம் அல்லது செயல்பாடு ஏதுமின்றி தன்னளவில் யோக்கியமாக நடந்து பொருளாதார ரீதியாகத் தோற்றும் போன தந்தை கடந்த காலத்தில் தான் தவறு செய்து விட்டதாக நினைக்கிறார். மிரட்டல் மூலம் சிறுவர்களிடம் நிலை நிறுத்தப்படும் ஒழுக்கம் அவர்கள் இளைஞர்களானவுடனே, பெரும்பாலும் சிதறிவிடுவதைப் போல லஞ்சம் வாங்காமல் இருந்ததற்கு அவர் எதிர் பார்த்த ‘வெகுமதி’ கிடைக்காததால் மகனை வாங்கச் சொல்லி அறிவுரை சொல்கிறார் தந்தை.
சுஜாதாமற்ற கதைகளில் பாத்திரங்களிலிருந்து விலகி நின்று சித்தரிப்பதைப் போலத் தோற்றம் தரும் சுஜாதா ‘சாதி, இரண்டொழிய’-வில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தேர்வுக் குழுத்தலைவர் நரசிம்மனாகவே மாறுகிறார். கதையினுள்ளே நரசிம்மனுக்கும் சித்தார்த்தனுக்கும் நடக்கும் விவாதத்தில், பாப் வெட்டிக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணைப் பற்றிய சித்தரிப்பில் இட ஒதுக்கீட்டின் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்ற ‘தாழ்ந்த’ சாதியினர்மீது பார்ப்பன நடுத்தர வர்க்கம் கொண்டுள்ள கோபமும், அருவெறுப்பும் விகாரமாகத் தலை நீட்டுகின்றன.
பார்ப்பனப் பையன் ரமேஷ் முனிசிபல் குழாயில் தண்ணீர் குடிப்பதும், ஷீலா சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாக இண்டர்வியூவுக்கு வந்து இறங்குவதும் வக்கிரச் சித்தரிப்பின் எல்லைகள். அறிவுத் திறன் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டு ‘என்னய்யா தேசம் இது?’ என்று அலுத்துக் கொள்ளும் பார்ப்பன நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி நரசிம்மன். சொகுசு வாழ்க்கை தேடி அமெரிக்கா போனது என்ன தேசப்பற்று? தங்களது ஒழுக்க சீலத்திற்கு தங்களது அறிவுத்திறனையே உத்திரவாதமாகக் காட்டுவது நடுத்தர வர்க்கத்தின் பழக்கம். அறிவுத்திறனும் ஒழுக்கசீலமும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்வது அபூர்வம் என்பதற்கு நரசிம்மன் ஒரு உதாரணம்.
கண்ணால் பார்த்த கொலைக்கு சாட்சி சொல்வதற்குக் கூட அஞ்சும், மறுக்கும் நடுத்தர வர்க்கம் சமூகத்திலிருந்து விலகி நிற்கும் அதன் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கொலை நடந்து விட்டதே என்று பதறுவதை விட அதை நாம் பார்க்க நேர்ந்ததே என்று பதறுவதும், அந்த வட்டாரத்திலிருந்தே, வீட்டை காலி செய்வதன் மூலம் சமூகத்தின் எல்லாவிதக் குறுக்கீடுகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிடலாம் என்று கனவு காண்பதும், சட்டம் அறிந்த அதன் அசட்டு வீரம் காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் கரைவதும் மத்தியமரின் கோழைத்தனத்திற்கு மட்டுமல்ல சமூக விரோதப் போக்கிற்கும் சாட்சியங்கள்.
நீலப் புடவை ரோஜாப்பூவில் கணவன் மனைவியிடையே தோன்றி வளர்ந்துவிட்ட இடைவெளியை நிரப்ப அவர்களில் ஒருவர் முயலவில்லை என்பது மட்டுமல்ல, மூன்றாமவரின் உதவியுடன் அதைத் தீர்த்துக்கொள்ளவும் அவர்களது ‘கவுரவம்’ இடம் தர மறுக்கிறது. ஆனால், பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளைக் கண்டுபிடிக்கவும் ஒருவருக்கொருவர் ‘காகித துரோகம்’ செய்து கொள்ளவும் கவுரவம் தடையாயில்லை. பெண்ணடிமைத்தனம், மாறிவரும் சமூகச் சூழலில் பெண்ணின் உரிமைகளை அங்கீகரிக்கத் தயங்கும் ஆணாதிக்கம், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் கோழைத்தனம் ஆகியவை படித்த நகர்ப்புற ‘மத்யமரின்’ குணநலன்கள். கூட்டுக் குடும்பங்களில் குரலை உயர்த்தி குடும்ப முரண்பாடுகளை ‘தீர்க்கும் பாட்டனின் வேலையை இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் செய்து வருகின்றன. தீர்க்கப்படாத முரண்பாடுகளின் விளைவாய் உறவுகள் அழுகி வருகின்றன.
மற்றொருத்தி தன் கணவனின் வாழ்வில் குறுக்கிட்டு விட்டதை ஒரு வேலைக்காரனுக்கேயுரிய விரக்தியுடனும் ஆத்திரத்துடனும் விழுங்கிக் கொள்கிறாள் மனைவி. எதுவாயிருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்தின் புனிதம் பற்றிய மாயை, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் போது நடுத்தர வர்க்கம் முதுகில் சுமந்து வந்த பெண்ணடிமைத்தனம் பற்றிய கோட்பாடுகள் அனைத்துமாகச் சேர்ந்து மனைவியைக் கட்டிப் போடுகின்றன. மாமியாரின் உபதேசம் முடிச்சை மேலும் இறுக்குகிறது. அந்த ‘இன்னொருத்தி’யும் நடுத்தர வர்க்கம் என்பதுதான் எழுதப்படாத உண்மை.
***
“விசயம் தெரியாதவன் முட்டாள்: தெரிந்தும் மவுனமாக இருப்பவன் கிரிமினல்” என்றார் பெர்டோல்டு பிரெக்ட், என்ற ஜெர்மன் நாடகாசிரியர். நாஜிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெற்ற நூரன்பர்க் விசாரணையில் ஹிட்லர் அரசில் ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்து லட்சக்கணக்கான யூதர்களையும், ஜனநாயகவாதிகளையும் படுகொலை செய்தவர்கள் விசாரிக்கப்பட்டபோது “நாங்கள் அரசு உத்தரவை நிறைவேற்றினோமே தவிர இந்தக் கொலைகளில் எங்களுக்கு நேரடிப் பங்கு இல்லை; நாங்கள் நாஜிகளும் இல்லை” என்று வாதிட்டார்கள். தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்ற அவர்கள் சாதித்த மவுனம் மன்னிக்கப்படவில்லை.
இந்த நடுத்தர வர்க்கத்தைத்தான் ‘மவுனப் பெரும்பான்மை’ என்று குறிப்பிடுகிறார் சுஜாதா. உண்மையில் மவுனப் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள்; அவர்களுடைய மவுனம் அறியாமையின் விளைவு; நடுத்தர வர்க்கத்தின் மவுனமோ காரியக்காரனின் மவுனம்.
ஆனால் எழுத்தாளர்கள் பலரும், பத்திரிக்கைகளும் மக்கள் என்று குறிப்பிடும் போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைத்தான் அர்த்தப்படுத்துகிறார்கள். ஏனெனில் இந்த மந்தைதான் விருப்பு வெறுப்புகள் இன்ப துன்பங்களை அணுகி ஆய்ந்து எழுதுவதின் மூலம் இவர்களைச் சொறிந்து விடுவதுடன் தமக்குத் தாமே சொறிந்துவிட்டுக் கொள்கிறார்கள் இந்த மத்தியமர்கள்.
நடுத்தர வர்க்கத்தின்அருமை பெருமைகளைப்பற்றி இவர்கள் அள்ளிவிடும் சரக்குகளுக்கு அளவே இல்லை. ‘படித்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை; அது ஒரு சாக்கடை என்பதால் இறங்கத் தயங்குகிறார்கள்’ என்பது திண்ணை தூங்கிகளின் பத்திரிக்கையான துக்ளக்கின் கருத்து. இதில் அங்கலாய்க்க எதுவும் இல்லை. ஓட்டுச் சீட்டு அரசியலின் ஒப்பீட்டளவிலான நிச்சயமின்மையைக் கூட நடுத்தர வர்க்கத்தால் சீரணிக்க முடிவதில்லை. அது எதிர்பார்க்கின்ற உத்திரவாதங்கள் அங்கே கிடைப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. ஒரு வேளை அரசியல் சூதாட்டக் களத்தில் இவர்கள் இறங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள், சுஜாதாவின் 8 கதைகளையும் மனதில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் – இவர்களுடைய வரவு அரசியல் ஒழுக்கத்தை முன்னேற்றிவிடுமா என்று.
நடுத்தர வர்க்கம் நிரந்தரமாக ஏணிப்படிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தாலும், தரை சமீபத்தில் இருந்தாலும் அதன் சிந்தனை, ஏணியின் உச்சிப்படியில் தான் இருக்கும். மேலே ஏறும் மோதலில் தள்ளிவிடப்படுவர்களையும் தடுமாறி விழுபவர்களையும் பற்றி அவர்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. இந்தக் கசப்பான உண்மையின் காரணமாகத்தான் தங்களால் ஏற்றிப் போற்றிக் கூறப்பட்ட ஒழுக்க நெறிகளை சிறிதும் கூச்சமின்றி அவர்கள் உதறுகிறார்கள். சக மனிதனை மனிதனாகக் கருதாமல் பயன்படுத்திவிட்டுத் தூர எறியக்கூடிய பொருளாக நினைக்கிறார்கள். தங்களது இந்தச் சரிவிற்கு நியாயமும் கற்பிக்கிறார்கள்.
மத்தியமரின் பலவீனங்களை எழுதப் புகுந்த சுஜாதாவின் ‘நேர்மையை’ப் பாராட்ட முடியுமா? இயலாது. பார்ப்பனியக் கலாச்சாரத்தின் சில கூறுகளை கேலி செய்யும் எஸ்.வி.சேகரைப் போல, தன்னைத்தானே கேலி செய்து கொள்ளும் ‘சோ’ வைப்போலத்தான் சுஜாதா தன்னுடைய வர்க்கத்தைக் ‘கேலி’ செய்கிறார். இந்தக் கேலி வாசகர்களைக் கூனிக் குறுகச் செய்ய வேண்டும். தங்களது பண்பாட்டின் இழிவுகுறித்து வெட்கித் தலைகுனியச் செய்யவேண்டும். ஆனால் சுஜாதாவே நடுத்தர வர்க்கத்தின் பண்பாட்டு சீரழிவுக்காக வெட்கப்படவில்லை; சீரழிவைப் பிரதிபலிக்கிறார் அவ்வளவுதான்.
ஆனால் வாசகர்களோ சுஜாதாவைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். சறுக்கி விழும் ஒவ்வொரு பாத்திரமும் அவ்வாறு விழ நேர்ந்ததற்கான காரணங்களை தத்தம் போக்கில் வியாக்கியானம் செய்கிறார்கள். மற்றப்படி வாழ்க்கை சீராக, அமைதியாகச் செல்வது குறித்து மகிழ்ந்து கொள்கிறார்கள்.
பரிவும், அக்கறையும், நல்லெண்ணமும் மருந்துக்குக் கூட இல்லாமல் ஆனால் இருப்பதைப் போன்ற ஒரு முகத்தை, அணிந்துகொண்டு பக்கத்து வீட்டுக்காரரை நலம் விசாரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் போல – சுஜாதா எழுதுகிறார்; கல்கி பிரசுரிக்கிறது. வாசகர் படிக்கிறார். பிறகு ‘சாட்சி’ எழுதிய சுஜாதா ஒரு அவசர நிலைவரும் போது சீரங்கத்து அம்மா மண்டபம் படித்துறை பற்றி எழுதிக் கொண்டிருப்பார் அல்லது அவசரநிலை வராதபோதோ கலைஞர் பிறந்த நாள் விழாவில் வாழ்த்துறை வழங்கிக் கொண்டிருப்பார். ‘கல்யாண ஏற்பாடு’ பிரசுரித்த கல்கி பிட்ஸ்பர்க் பார்ப்பனர்களின் பக்தி சிரத்தை பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிடும். வாசகர் கல்கியை எடைக்குப் போட்டுவிடுவார்; அல்லது சுஜாதா கதையை மட்டும் கிழித்து பைண்டிங் செய்து அலமாரியில் பத்திரப்படுத்துவதுடன் சுஜாதாவின் ‘மத்தியமராக’வே நீடிப்பார்.
- பஷீர் vinavu.com/

கருத்துகள் இல்லை: