புதன், 24 ஏப்ரல், 2013

அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல! ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சி !

அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் ! கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் !
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்

கண்டன ஆர்ப்பாட்டம்
துரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக 22.04.2013 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரெங்கநாதன் தலைமையேற்றார்.

மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு.மு.திருநாவுக்கரசு, ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், விவசாயிகள் விடுதலை முன்னணி உசிலை வட்டாரச் செயலாளர் தோழர் ந.குருசாமி, ம.உ.பா.மையத்தின் மதுரைக் கிளைத் துணைச் செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் திரு.அறவாழி, ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சக மாணவர்கள் அர்ச்சகர் தோற்றத்திலேயே கலந்து கொண்டதோடு வேத மந்திரங்கள், தேவார திருவாசகங்களை தமிழிலும், சமஸ்கிருதத் திலும் துல்லியமாக ஓதி தாங்கள் பார்ப்பனர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை திரளான பொதுமக்களுக்கு உணர்த்திக் காட்டினர்.
முதலில் பேசிய வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளை இதுவரை யாரும் அகற்ற முன்வரவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சக மாணவர்களை ஒன்றுதிரட்டி சங்கம் அமைத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது. இது எங்களுடைய (இந்து) மத உரிமையை பாதிப்பதாகும் என்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டர்களாகிய ஆதி சிவாச்சாரியார்கள் நலச் சங்கத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். சட்டம் இயற்றி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் திறந்து 206 மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்து அவர்கள் தீட்சையும் பெற்றுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலுள்ள தடையை நீக்குவதற்கு தி.மு.க.அரசு முயற்சி செய்யவில்லை. அர்ச்சக மாணவர்களுக்கு வேலை தரவும் முடியாது என்று மறுத்து விட்டது. 2008ம் ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்கள் இன்று வரை வேலை இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அர்ச்சக மாணவர்களை உச்சநீதிமன்ற வழக்கில் ஒருதரப்பினராகச் சேர்த்து நாங்கள் போராடி வருகின்றோம். இப்போது ஜெயலலிதா அரசு இந்த வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுக தீர்வு ஏற்படுத்திக் கொள்வதாக உச்சநீதிமன்றத்திலே அறிவித்திருக்கிறது. அது எந்த வகையான சுமுக தீர்வு என்று சொல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சக மாணவர் தரப்பினை கேட்காமல் எவ்வாறு சுமுக தீர்வு எட்ட முடியும். சுமுக தீர்வு என்ற பெயராலே அர்ச்சக மாணவர்களை ஒதுக்குப்புறமாக உள்ள கோவில்களில் குறைந்த சம்பளத்திற்கு நியமிக்கும் மோசடித் திட்டம் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் எவ்வாறு உடன் பட முடியும். அர்ச்சக மாணவர்களுக்கு வேலை வழங்கவில்லையென்றால் மீனாட்சி கோவில் கருவறைக்குள் நுழைந்து மீனாட்சியிடமே கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.
மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி பேசும்போது அர்ச்சகர் ஆக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் அவருடைய வேலையை தனது உறவினர்கள் மூலம் செய்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது. அவரை கருவறைக்குள் அனுமதித்தது யார்? பார்ப்பன பட்டர்கள் அனைவருமே தீயவர்களாக உள்ளனர். அதனால் தான் இந்த நாடு சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். அதுவரை மாணவர்களோடும், ம.உ.பா.மையத்தோடும் இணைந்து வழக்கறிஞர் சங்கம் போராடும் என்று கூறினார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.மு.திருநாவுக்கரசு பிறப்பால் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைப்பது சட்டத்துக்கு புறம்பானது. தேவநாதனும், சங்கராச்சாரியும் தொட்டால் தீட்டுப்படாத சாமி அரசு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் தொட்டால் மட்டும் தீட்டாகி விடுமா என்று கேள்வி எழுப்பினார்.
ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்தாமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்ற அரசுகள் வழக்கை விரைந்து நடத்தி முடித்து பணிநியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உசிலை வட்ட வி.வி.மு. செயலர் தோழர் குருசாமி பேசும் போது தந்தை பெரியார் தொடங்கிய இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்திலே மீனாட்சி கோவில் பட்டர்கள் வழக்கு தொடுத்த போது அதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பார்ப்பன பட்டர்களை திருப்திப் படுத்துகின்ற வகையிலும், சட்டம் இயற்றிய அரசை திருப்திப் படுத்துகின்ற வகையிலும் தீர்ப்பு வழங்கியது. இதைத் தான் ஆப்பரேசன் வெற்றி, நோயாளி மரணம் என்று பெரியார் குறிப்பிட்டார். நாங்கள் அர்ச்சக மாணவர்களை கைவிடமாட்டோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்.
அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரெங்கநாதன், திக்குத் தெரியாத காட்டில் நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு திகைத்து நின்ற வேலையிலே மனித உரிமை பாதுகாப்பு மையம் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு.ராஜூ எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார். சிதறிக் கிடந்த எங்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி பல்வேறு போராட்டங்களின் வாயிலாக எங்களுடைய பிரச்சினையை மக்களின் கவனத்திற்கு கொண்டு போய் இன்றைக்கு அது எல்லோராலும் அறியப்பட்ட ஒரு பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஒன்றுபட்டு போராடி ம.உ.பா.மையத்தோடு இணைந்து நாங்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவை அகற்றுவதோடு மாத்திரமல்லாமல் பணி நியமனமும் பெறுவோம் என்று கூறினார்.
இறுதியாக உரையாற்றிய ம.உ.பா.மையத்தின் மாவட்டச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ், மீனாட்சி கோவில் ஆதி சிவாச்சாரியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் பார்ப்பன பட்டர்கள் கோவிலுக்குள்ளே பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நுழையக் கூடாது என்று சொல்லி மீனாட்சிக்கு அர்ச்சனை செய்ய மறுத்து அம்போ என்று விட்டு விட்டு ஓடிவிட்டவர்கள் தான். மேலும் வெள்ளைப் பரங்கியர்களுடைய ஆட்சி போனது எண்ணி வருந்தி எங்களுடைய ஆட்சியும் பறிபோய் விட்டது என்று கூறியவர்கள் தான் இந்தப் பார்ப்பனப்பட்டர்கள். இன்றைக்கும் பார்ப்பனர்கள் தங்களுடைய வாரிசுகளை மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பி தாய்நாட்டின் நலனுக்கெதிராக அந்நியர்களுக்கு சேவகம் செய்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பப்படி ஒரு தொழிலையோ அல்லது பணியையோ தேர்ந்தெடுத்துக் கொள்வதைப்போல அர்ச்சக மாணவர்களும் இறைவனுக்கு திருத்தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆவலோடு தான் இந்தப் பயிற்சிக்கு வந்தார்கள். பல இன்னல்களுக்கு மத்தியிலே படித்து முடித்தார்கள். ஆனால் அரசு ஊழியர்களாக சம்பளம் பெற்றுக் கொண்டு அர்ச்சகர் பணி செய்யும் சிவாச்சாரியார்கள் அரசை எதிர்த்து சாதியின் பெயராலே, ஆகமத்தின் பெயராலே கருவறைக்குள்ளே தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். அதை இந்த அரசு அனுமதிக்கிறது. அரசியல் சட்டம் தீண்டாமையை குற்றம் என்று வரையறுக்கிறது. ஆனால் பார்ப்பனர்கள் இந்துக்களின் உரிமை என்கிறார்கள். அப்படியானால் அரசியல் சட்டம் பெரிதா, ஆகம விதிகள் பெரிதா? என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பெரிய கோவில்களிலே அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்களிடம் தான் இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், அதிகார வர்க்கத்தினரும், அரசியல் தலைவர்களும், முதலாளிகளும் போய் பவ்வியமாக நின்று பிரசாதம் வாங்குகிறார்கள். இவர்கள் எப்படி பார்ப்பனப்பட்டர்களுக்கு எதிராக இருப்பார்கள்.
அரசை நம்பி படித்து முடித்து பட்டம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்பும் வேலை தரப்படாமல் அனாதைகளாக அர்ச்சக மாணவர்கள் விடப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
மாணவர்களுடைய ஒத்துழைப்போடு சட்ட ரீதியாகவும் நடைமுறையிலும் இதனை நாங்கள் முறியடிப்போம். சூத்திரப் பஞ்சம சாதிகளின் மீதான இந்த இழிவை துடைத்தெறிவோம். அர்ச்சகர் மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்காவிட்டால் மீனாட்சி கோவில் கருவறைக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டியே தீர்வோம் என்றார்.
பழனி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் காட்டு ராஜா சமஸ்கிருத ஸ்லோகங்களையும், தமிழ்ப்பதிகங்களையும் இறுதியில் பாடினார். கூடியிருந்த மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நின்று கவனித்து கேட்டு பாராட்டிச் சென்றனர்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை நின்று சிறப்பித்தனர்.vinavu.com

கருத்துகள் இல்லை: