வியாழன், 25 ஏப்ரல், 2013

மன்மோகன் சிங்குக்கு யஷ்வந்த் சின்ஹா: “ராசா போட்டு உடைத்தும், நீர் மௌன சாமியாரா?”

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்கள் இனியும் மௌன சாமியாராக இருந்தால்,
ஊழலில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஆ.ராசா குற்றவாளி என்றால், நீங்களும் குற்றவாளிதான்” என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது. அதே ஜே.பி.சி. அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாரதிய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.
சின்ஹாவின் கடிதத்தில், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை செய்த பின்னர்தான் எடுக்கப்பட்டது என்று ஆ.ராசா கூறியுள்ளார். அதனால் நீங்களும் (பிரதமர் மன்மோகன் சிங்) குற்றவாளிதான்.


மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு விசாரணைக்காக நீங்கள் ஆஜராக வேண்டும். நீங்கள் அமைதியாக தொடர்ந்து இருந்தால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும்.
கடந்த 2-ம் தேதி எனக்கு ஒரு கடிதம் எழுதினீர்கள். அதில் மறைப்பதற்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளீர். ஆனால் உங்களது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆ.ராசா, உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதனால் நீங்கள் கூறியது அனைத்தும் நிராகரிக்கப்பட கூடியதாக உள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு திணறத்தான் போகிறது. காரணம், ஜே.பி.சி.க்கு ஆ.ராசா அனுப்பியுள்ள அறிக்கையில், 2ஜி ஏலம் விடப்பட்டதில் நுழைவுக்கட்டணம் உள்பட பல முக்கிய முடிவுகள் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர்தான் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
“Your silence will confirm the worst fear of the people of India that you were fully involved in the 2G scam and if Raja is guilty, so are you,” BJP leader Yashwant Sinha wrote.

கருத்துகள் இல்லை: