சனி, 27 ஏப்ரல், 2013

தமிழக சாதி அரசியலின் தந்தை டாக்டர் ராமதாஸ் !

தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் எல்லாம் பிரமாதமாக இருந்தது; திடீர் என்று ராமதாஸ் முளைத்தார் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது சாதி அரசியல் தலையெடுத்திருக்கும் அளவுக்கு இதற்குமுன் இல்லை என்று கட்டாயம் சொல்லலாம்.பொதுவாக சாதி பார்த்துதான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை நிற்கவைக்கின்றன. ஆனால் அவை யாவும் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசுவதில்லை. அதுவும் பொதுக்கூட்டங்களில், அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதி பேசுவதில்லை.ராமதாஸ்தான் இதனை உடைத்து வெளிப்படையாக வன்னியர் சங்கம் மூலம் இட ஒதுக்கீடு கோரிப் பெரும் போராட்டம் நடத்தினார். அதுகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொது இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வேண்டிய இடம் கிடைப்பதில்லை என்று ராமதாஸ் போராடியதன் விளைவாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று 20% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த விளைவின் காரணமாகவே போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஏற்பட்டது என்று சொல்லலாம்.


ஆனால் இப்போது ராமதாஸ் இறங்கியிருக்கும் வேலை அவ்வளவு சிலாக்கியமானதாகத் தெரியவில்லை. வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சி ஆனாலும் வன்னிய அடையாளம் எப்போதுமே ராமதாசிடம் ஒட்டியபடியே இருந்தது. மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் தனித்து அரசியல் செய்ய முடிவெடுத்தாலும் அதனாலும் பெரும் பலன் எதும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்ததும்தான் இப்போது சாதி அரசியல் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் பாராட்டப்படத்தக்க பல நல்ல போக்குகளைக் கொண்டுவந்தவர் ராமதாஸ். திருமாவளவனுடன் சேர்ந்து வன்னியர்களும் தலித்துகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்தவர் ராமதாஸ். குடிப் பழக்கத்துக்கு எதிராக, சிகரெட் பழக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். (அவருடைய கட்சி ஆசாமிகள் இதனைப் பின்பற்றுபவர்களா என்பது வேறு விஷயம். மாமல்லபுரத்தில் நேற்று அனைவரும் இளநீரும் மோரும் மட்டும்தான் பருகினர் என்று வைத்துக்கொள்வோம்.) இலவசங்கள் கூடாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார் ராமதாஸ். தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமதாஸ். மாற்று பட்ஜெட் என்ற ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர்.

தனித்தனியாக இவையெல்லாம் நல்ல கருத்துகள் என்றாலும் இவை எவையும் சித்தாந்தரீதியில் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வரவில்லை. இடதும் இல்லை, வலதும் இல்லை. மக்களிடம் இதுகுறித்து பாராட்டுதல்களும் இல்லை. தன் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள், பிளவுகள். திமுக, அஇஅதிமுகவிடமிருந்து இனி அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்து அவரை வேறு திசைக்குத் தள்ளிச் சென்றுவிட்டன போலும்.

சித்திரை முழுநிலவுப் பெருவிழா (சித்ரா பௌர்ணமி) சென்ற ஆண்டு நடந்தபோதுதான் காடுவெட்டி குருவிடமிருந்து மிகக் கொடூரமான சாதி இழிவுப் பேச்சு வெளியானது. இந்த ஆண்டு விழாவுக்குள் தர்மபுரிக் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. தலித்துகளுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்க சில சாதிக் கட்சிகளைத்தூண்டி அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இருக்கிறார் ராமதாஸ்.

ஆனால் இந்த முயற்சியின் பலனாக ஆட்சியைக் கைப்பற்ற எவ்விதத்தில் சாத்தியம் என்று நினைக்கிறார் இவர் என்று புரியவில்லை. உத்தரப் பிரதேசம் அல்லது பிகாரில் யாதவ் சாதியினரின் எண்ணிக்கை பலத்துக்கு எந்தவிதத்திலும் அருகில் வரும் நிலையில் தமிழகத்தில் வன்னியர்கள் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20 கோடி மக்கள் தொகையில், சுமார் 20-25% பேர் யாதவ் என்ற வரையறைக்குள் வருவார்கள் என்கிறார்கள். தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். (அதுவும் அத்தனை பேரும் மாமல்லபுரத்தில் கூடப்போவதாகவும் சொன்னார். எப்படித் தாங்கியதோ!) ஆனால் உண்மை எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

உத்தரப் பிரதேச பாணியில் யாதவ் vs தலித் என்பதுபோல தமிழகத்தில் வன்னியர் vs தலித் என்று ஒரு சமன்பாட்டை இவர் முன்வைக்க விரும்புகிறார்போலும். ஆனால் உள்ளதும் போச்சுடா என்று ஆகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடப்போகிறார்கள் என்றும் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: