சென்னை: ரூ.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.50
லட்சம் வாங்கி ஏமாற்றியதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த
தொழிலதிபர் ரெங்கநாதன் (60), தனது ஓட்டல் தொழிலை விரிவுபடுத்த முடிவு
செய்தார். அதற்காக பலரிடம் கடன் வாங்க முயற்சி செய்தார். இந்நிலையில்
ஆந்திராவை சேர்ந்த விஷ்ணு, சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற 2
புரோக்கர்கள் அறிமுகமாகினர். சென்னை அண்ணாநகரில் வசிக்கும் நடிகர் பவர்
ஸ்டார் சீனிவாசன், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து குறைந்த
வட்டியில் பலருக்கு கடன் வாங்கித் தருவதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் உதவியுடன் சீனிவாசனை சந்தித்த ரெங்கநாதன், ரூ.5 கோடி கடன்
கேட்டுள்ளார்.
கடன் வாங்கித் தருவதாக ஒப்புக் கொண்ட சீனிவாசன், அதற்காக ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நம்பி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.50 லட்சத்தை சீனிவாசனிடம் ரெங்கநாதன் கொடுத்துள்ளார். அதற்கு சீனிவாசன் ரசீதும் கொடுத்துள்ளார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை ரெங்கநாதன் திருப்பி கேட்டார். பணத்தை தருவதாக சீனிவாசன் எழுதிக் கொடுத்துள்ளார். ‘இப்போதுதான் பல படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் பணத்தை திருப்பி கொடுக்கிறேன்’ என்று சீனிவாசன் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து சாக்குபோக்கு சொல்லி இழுத்தடித்து வந்ததால் இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரெங்கநாதன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஸ்ரீதரன், எஸ்ஐ முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மோசடி செய்தது உறுதியானதால் சீனிவாசன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், இன்று காலை அண்ணாநகர் வீட்டில் இருந்த சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். அவரை கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள புரோக்கர்களை போலீசார் தேடி வருகின்றனர்.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக