செவ்வாய், 15 நவம்பர், 2011

அணுஉலை எதிர்ப்பு கற்காலத்துக்கு இட்டுச்செல்லும்

கூடங்குளத்தில் நிகழ்ந்து வரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்களை நாண வைப்பவை. அறிவியலுக்கு எதிரானதும், பழைய கற்காலத்துக்குப் பாதை சமைப்பதுமாகும்.
அணு உலை எதிர்ப்பு என்று சாதாரணமாகத் தொடங்கிய இந்நிகழ்வு, அணு உலையை மூட வேண்டும் என்று மூர்க்கமாக மாறி உள்ளது.எதிர்ப்பாளர்களைச் சந்தித்து, அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் தர முன்வந்த டாக்டர் அப்துல் கலாமை, கூடங்குளத்துக்கு வரக் கூடாது என்று தடை விதித்ததன் மூலம், அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆணவத்தில், தலிபான்களையும் விஞ்சி விட்டனர்.கடந்த 1988 நவம்பரில், ரஷ்ய அதிபர் மிகையில் கோர்ப்பச்சேவ், இந்திய பிரதமர் ராஜிவ் ஆகிய இருவரும், கூடங்குளம் அணு உலைத் திட்டத்தில் கையெழுத்திட்டனர். 1991-96 காலகட்டத்தில், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இத்திட்டத்துக்கு ஆதரவளித்தார்.

அணு உலைக்கும் ஊழியர் குடியிருப்புக்குமான இடம் என்று, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, கூடங்குளம் பகுதி மக்கள் முழு ஆதரவையும் நல்கினர். தொடர்ந்து, கட்டடம் கட்டமாக மக்களின் ஒத்துழைப்புடன் திட்டப் பணிகள் நடந்தேறி, தற்போது அணு உலை முழுமை அடைந்து நிற்கிறது.உலை இயங்குவதற்கும் மின் உற்பத்தி தொடங்குவதற்குமான நாள் குறிக்கப்பட்டு விட்ட நிலையில் திடீரென எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 1988 முதல் 2011 வரையிலான கால் நூற்றாண்டு காலமாக இந்த உலைக்கு ஆதரவு அளித்தவர்கள், இப்போது திடீரென எதிர்ப்பது ஏன்? வெண்ணெய் திரளும் போது தாழியை உடைத்தே தீருவேன் என்று முரண்டு பிடிப்பது ஏன்? நேற்று வரை இனித்த அணு உலை, இன்று கசப்பது ஏன்? அணு உலை தீயது என்றால், இளைதாக முள்மரம் கொன்று இருக்கலாமே? அதை விடுத்து தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது ஏன்? குழந்தை வேண்டாம் என்றால், முதலிரவன்றே ஆணுறையை அணிந்து கொண்டிருக்க வேண்டுமே அல்லாமல், பனிக்குடம் உடையும் நேரத்தில் குழந்தை வேண்டாம் என்று கூச்சலிடுவதா? இது பேதைமை மட்டுமின்றி, கயமையும் ஆகும் அல்லவா!

அணு உலை விபத்துகள்:அணு உலைகள் தீண்டத் தகாதவை அல்ல. பாதுகாப்பு அற்றவையோ, உயிருக்கு ஊறு விளைவிப்பவையோ அல்ல. உலகம் முழுவதும் 440 அணு உலைகள், முப்பது நாடுகளில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும், 104 அணு உலைகள் செயல்படுகின்றன.ஜப்பான் நாடு இந்தியாவைப் போல், தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டதல்ல. அது பல்வேறு தீவுகளின் கூட்டம். மொத்த பிராந்தியமும் பூகம்ப அபாயத்தால் சூழப்பட்டுள்ள ஜப்பானில் மட்டும், 31 அணு உலைகள் இயங்கி வருகின்றன.அமெரிக்கா, ஜப்பானோடு ஒப்பிடுகையில், அணுமின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. இந்தியாவில் மொத்தமுள்ள ஆறு அணு மின் நிலையங்களில், இருபது அணு உலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.சிறிய மற்றும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விட்ட விபத்துகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், உலகளாவிய அணுமின் உற்பத்தியின் 50 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை மூன்று விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன.
*அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதிக்கு அருகில் உள்ள "மூன்று மைல் தீவு' (1979 மார்ச்)
*உக்ரைனில் உள்ள செர்னோபில் (1986 ஏப்ரல்)
*அண்மையில், ஜப்பானின் புகுஷிமா (2011 மார்ச்) ஆகிய மூன்று இடங்களில் நிகழ்ந்த விபத்துகளே, உலகின் கவனத்தை ஈர்த்தவை.

இவற்றில் "மூன்று மைல் தீவு' விபத்தானது, அணு மின் உற்பத்தியின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது. அணு மின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் போக்கில், இத்தகைய குறைகள் சுலபத்தில் களையப்பட்டு விட்டன.

செர்னோபில் விபத்தின் படிப்பினைகளால் புடம் போடப்பட்ட புதிய தொழில்நுட்பம், விபத்துகள் நேரா வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

புகுஷிமாவில் அணு உலை எதுவும் வெடிக்கவில்லை என்பதும், பூகம்பம் மற்றும் சுனாமியின் இரட்டைத் தாக்குதலின் விளைவாக, அணு உலை வெள்ளத்தில் மூழ்கியதால் தான் விபத்து நிகழ்ந்தது என்பதும் கருதத்தக்கது.

அணுஉலை தொழில்நுட்பம், தொடர்ந்து மாறி வருகிறது; புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் தலைமுறையில் தொடங்கி, இன்று மூன்றாம் தலைமுறையை எட்டி, நான்காம் தலைமுறையை நோக்கிப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் திருத்தங்களின் விளைவாக, மென்மேலும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கூறுகளுடன், அணு உலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.அணு உலைகளில் நிகழும் சிறிய விபத்துகள் கூட, ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்படுகின்றன. அனல் மின் உற்பத்தி சார்ந்த நிலக்கரிச் சுரங்கங்களில் விபத்தும், உயிரிழப்பும் இன்று வரை தொடர்கதையாக இருப்பினும், ஊடகங்கள் இவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.

ஒன்றே முக்கால் லட்சம் பேர் உயிரிழந்த ஒரு ராட்சத விபத்து பற்றி, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மின் உற்பத்தி வரலாற்றில், ஒரு தீராத களங்கமாக நிலைத்துள்ள இந்த விபத்து, எந்த ஒரு அணு உலையும் வெடித்ததால் ஏற்பட்டதல்ல. 1975-ல், சீனாவின் ரு என்ற ஆற்றில் கட்டப்பட்ட ஷிமன்டன் அணை உடைந்து விட்டது. புனல் மின் உற்பத்திக்காக நிறுவப்பட்ட இந்த அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஒரு லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1 கோடி பேர் வீடிழந்தனர். மனித குல வரலாற்றின் துயரம் மிக்க இந்தப் பேரழிவுக்குப் பின்னரும், இனி புனல் மின்சாரமே வேண்டாம் என்று, யாரும் முடிவு செய்து விடவில்லை.

பிரமிக்கத்தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்:நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 13,171 கோடி ரூபாய் செலவிலான, ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு உலைகள் இயங்குவதற்கு ஆயத்தமாய் உள்ளன.கூடங்குளம் உலைகள் VVER எனப்படும் ரஷ்ய தொழில்நுட்பத்தால் ஆனவை. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் VVER உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவிய அணு உலைத் தொழில்நுட்பத்தில் இது தான் உயர்ந்தது; உச்சகட்ட பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணு உலைகள், கனடாவின் காண்டு உலைகள், ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட, ரஷ்யாவின் VVER உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை என்பது உலகறிந்த உண்மை.கூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் எனப்படும் அழுத்தமுறு இயல்நீர் உலைகள் ஆகும். இதன் எரிபொருள், சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். தணிவிப்பான் ஆகவும் குளிர்விப்பான் ஆகவும் சாதாரண தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் பயன்படுத்தப்படவில்லை.
ஏதேனும் விபத்து நேரும்பட்சத்தில், அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக் கொள்ளும். இதற்காக,
*எதிர்மறை வெற்றிட குணகம்
* எதிர்மறை ஆற்றல் குணகம் ஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே, உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பட்டு, காற்று மண்டலத்தில் கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.


எரிபொருள் உள்ள அணு உலையின் மையப் பகுதி, பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல, பலாப் பழத்துக்குள் கனத்த முள் தோலுக்கு அடியில் சுளைகள் இருப்பது போல, யுரேனிய எரிபொருள், உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மேலும், ஒரு பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டு மொத்த அமைப்பும், கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டுள்ளது. இருபது டன் எடையுடன் ஒரு ஜெட் விமானம், அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் சிராய்ப்பு கூட ஏற்படாது.

ஒருவேளை, ஹைட்ரஜன் தீப்பற்றி விடக் கூடாது என்பதற்காக, தண்ணீராக மாற்றப்பட்டு விடும். இதற்காக,"ஹைட்ரஜன் சேர்ப்பான்கள்' அணு உலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது, யாரும் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தானாகவே இயங்கும் இயல்பு வெப்ப நீக்க ஒழுங்கு' என்ற அமைப்பு, உலையைக் குளிர்வித்து வெப்பத்தை தணித்து விடும்.அணு உலையும் அதைச் சார்ந்த கட்டுமானங்களும், கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால் அலைகள் தொட முடியாத உயரத்தில் தான், உலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, கடவுளே கட்டளையிட்டால் கூட, கூடங்குளம் உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறாது. இதற்குப் பின்னரும் அஞ்சுபவர்கள், வாழத் தகுதி அற்றவர்கள்.

எதிர்ப்பாளர்களின் சாரமற்ற வாதம்:விபத்துக்குள்ளான செர்னோபில் ரக அணு உலை தான் கூடங்குளத்திலும் உள்ளது என்ற அணு உலை எதிர்ப்பாளர்களின் கூற்று, அப்பட்டமான பொய். செர்னோபில் உலைகள் RBMK வகை. கூடங்குளம் உலைகள் VVER வகை. தொழில்நுட்ப ரீதியாக, இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.கீஆMஓ உலைகளில் தணிவிப்பானாக கிராபைட் இருந்தது. RBMK உலைகளில் சாதாரண தண்ணீர் தான் தணிவிப்பான் ஆகும். இதனால் என்ன லாபம்?மேலும், செர்னோபில் உலைகளைச் சுற்றிலும் கான்கிரீட் அரண் அமைக்கப்படாததால், கதிரியக்கம் வெளியேறியது. செர்னோபிலின் படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கூடங்குளம் உலைகளில், கதிரியக்கம் வெளியேறாது. உலகெங்கிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட அணு உலைகளுக்கு மிக அருகில் 20 லட்சம் பொறியாளர்களும், டெக்னீசியன்களும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

அணு உலைகளால் எத்தகைய கதிர்வீச்சு அபாயமும் இல்லை என்பதற்கு நிரூபணமாக, இவர்கள் இருந்து வருகின்றனர். அணு உலை ஆபத்தானது என்றால், எந்த இன்ஜினியராவது அதில் வேலை செய்ய முன்வருவாரா? அவர்களது படிப்புக்கு, ஆபத்தில்லாத பிற துறைகளில் வேலை கிடைக்காதா? அணு உலையால் ஆபத்து என்று நாம் வலிந்து கற்பிதம் செய்து கொள்வது தானே தவிர வேறல்ல என்பதற்கு, இதற்கு மேலும் என்ன நிரூபணம் வேண்டும்?

மாற்று வழி இல்லை : அணு உலை வேண்டாம் என்று கூறுவது, மின்சாரமே வேண்டாம் என்று கூறுவதற்குச் சமம். இன்றைய நிலையில், மின்சாரத் தேவையை நிறைவு செய்ய, அணு மின் உற்பத்தி தவிர வேறு வழி இல்லை.சுரங்கங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து கொண்டே வருவதால், அனல் மின்சாரத்துக்கு எதிர்காலம் இல்லை. நிலக்கரியை எரிக்க எரிக்க, பசுங்குடில் வாயுக்கள் வெளியேறி, "கரித்தடம்' பூமியின் மீது அழுத்தும். இது பூமியைச் சூடுபடுத்திவிடும். எனவே, அனல் மின் உற்பத்தி மிகவும் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.இந்தியாவில் இனி எந்த ஆற்றின் குறுக்கேயும் அணை கட்ட முடியாது. பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தைக் கையகப்படுத்தி, அங்கு வாழும் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தால் மட்டுமே, ஒரு அணையைக் கட்ட இயலும். இன்றைய சூழலில், இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.

காற்றாலை மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சாரம், உயிரிக் கழிவு மின்சாரம் ஆகியவை, யானைப் பசிக்குச் சோளப் பொரியாய் அமையுமே தவிர, நாளும் வளர்ந்து வரும் மின் தேவையை நிறைவு செய்ய இயலாதவை.உலகளாவிய அளவில் அணுமின் உற்பத்திக்கு மாற்றாக, வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அணுமின் உற்பத்தி என்பது, குறைகளே அற்ற முழு நிறைவான தொழில்நுட்பம் அல்ல என்றாலும், இன்று இருப்பதில் சிறந்தது இது தான் என்பதே எதார்த்தம்.மின் தேவை நிறைவுக்கான சிறந்த வழியைக் கண்டறிவது என்பது, உலகளாவிய பிரச்னை. இதற்காக தீர்வும் உலகளாவியதே.

உலையை மூடு என்னும் உள்ளூர் தீர்வுகள் சரிப்படாதவை. உலகெங்கிலும் உள்ள மக்கள், அணு உலைகளால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கின்றனர். கூடங்குளம் மக்கள் மட்டும், சபிக்கப்பட்டுவிட மாட்டார்கள்.அணு உலைகளில் தீர்வு காண வேண்டிய சிக்கல்கள், இன்னமும் நிறைய உள்ளன. ஆனால், அவை அணு - உலை இயக்கத்திற்கும், இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கும் தொடர்பு இல்லாதவை. இன்றில்லாவிடினும், நாளைய மானுடம் அவற்றுக்குத் தீர்வு காணும்.
மானுடத்தின் ஒளி சிந்தும் வரலாறு இதை மெய்ப்பிக்கிறது. மானுடம் வெல்லும் என்று முழங்குவோம்! மானுட வீறு பாடுவோம்! வாருங்கள் நண்பர்களே, கூடங்குளத்தைக் கொண்டாடுவோம்.


வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்ற தம்மா
- கம்பர்.


பி.இளங்கோ சுப்பிரமணியன்,இயக்குனர்,நியூட்டன் அறிவியல் மையம்,சென்னை.

கருத்துகள் இல்லை: