வியாழன், 17 நவம்பர், 2011

ஜெ. ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : புகழேந்தி பேச்சு

கடலூரில் நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் கடலூர் புகழேந்தி பேசினார்.
அவர்,‘’ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் இருண்டகாலம் தொடங்கி விடுகிறது. மக்கள் நலப்பணியாளர்களை வேலை நீக்கம் செய்து அவர்கள் குடும்பங்களை பரிதவிக்க வைத்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்களை தொடர்ந்து ஜெயலலிதா சாலை பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றை சேர்ந்த பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்.
வேலை தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் வேலைகளை பறித்து அவர்களை படுகுழியில் தள்ளும் படுபாதக செயலை செய்து வருகிறார்.ஜெயலலிதாவின் காட்டாட்சியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் பணியை தி.மு.க மேற் கொண்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழகத்தில் மவுன புரட்சி தொடங்கி உள்ளது.
யானை தன் தலையில் மண்ணை வாரிக்கொட்டிக்கொண்டதை போல தமிழக மக்கள் தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட அநியாயம் நடந்துள்ளது.
ஜெயலலிதா என்ற மண்ணால் அழுக்கான யானை குளித்து அழுக்கை போக்கும். மீண்டும் உதயசூரியன் உதிக்கும். மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பும் வரை தி.மு.க தொண்டர்களுக்கு இனி ஓய்வில்லை உறக்கமில்லை’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: