சனி, 19 நவம்பர், 2011

2G Action: சி.பி.ஐ.-யின் கூடைக்குள் புதிதாக துள்ளுவது எந்த பூனை?

ViruvirupuNew Delhi, India: CBI conducted raids at Vodafone office in Mumbai and Airtel office in Gurgaon  in conjunction with discrepancies in 2G spectrum allocation. Also there were raids at the residences of former Telecom Secretary Shyamal Ghosh and former director of Bharat Sanchar Nigam Limited (BSNL) JR Gupta.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தடாலடியாக இன்று (சனிக்கிழமை) எஃப்.ஐ.ஆர். ஒன்றைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே குற்றப் பட்டியலில் இருந்தவர்களைத் தவிர புதிதாக ஆட்களை வழக்குக்குள் கொண்டுவரும் உத்தேசம் சி.பி.ஐ.-க்கு இருப்பதாகத் தெரிகின்றது.
ஆ.ராசா அமைச்சராக இருந்த காலத்துக்கு முந்தைய காலத்து விவகாரங்களையும் புதிதாக கிளறத் தொடங்கியுள்ளது சி.பி.ஐ.
ஆ.ராசாவுக்கு முந்தைய காலம் என்று வரும்போது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்துடன், அதற்கு முன் ஆட்சி செய்த பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ட்ரான்ஸாக்ஷன்களும் வழக்குக்குள் வரப்போகின்றன.
ஆ.ராசாவுக்கு முன் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த மூவரின் பதவிக் காலத்தில் நடைபெற்ற அனைத்தையும் காட்சிக்குள் கொண்டுவர சி.பி.ஐ. விரும்புகிறது போல தெரிகிறது.
தி.மு.க.-வின் தயாநிதி மாறன், பா.ஜ.க-வை சேர்ந்த பிரமோத் மகாஜன், அருண்‌ஷோரி ஆகியோர்தான் அந்த மூன்று முன்னாள் அமைச்சர்களும். இவர்களில்  பிரமோத் மகாஜன் 2006-ல் மரணமடைந்து விட்டார்.
சி.பி.ஐ. இன்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததுடன் தொடர்பாக தனியார் செல்போன் நிறுவனங்கள், அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ.-யின் அதிரடிச் சோதனைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. மும்பையில் உள்ள வோடபோன் நிறுவனம், அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆகியவற்றில் திடீரென புகுந்து சோதனை செய்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
அதிகாரிகள் மட்டத்தில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஷியாம்லால் கோஷ், பி.எஸ்.என்.எல் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.குப்தா ஆகியோரது வீடுகளும் சி.பி.ஐ.-யால் இன்று சோதனையிடப்பட்டு உள்ளன.
இது ஓரளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரம்தான். ஏற்கனவே வழக்கு நடைபெறத் தொடங்கிவிட்ட நிலையில், கேஸை மேலும் விரிவு படுத்துவது, தற்போது குற்றம் சுமத்தப்பட்ட ஆட்களுக்கு ஒரு விதத்தில் நன்மைதான். சி.பி.ஐ.யின் ஆரம்பக் கட்ட விசாரணையே முடியவில்லை என்ற ஸ்டான்ட் அவர்களால் எடுக்கப்படலாம்.
சி.பி.ஐ. ஏதோ திட்டத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது நன்றாகவே தெரிகின்றது. இன்றுதானே கூடையை இறக்கி வைத்திருக்கிறார்கள், ஓரிரு நாட்களில் கூடைக்குள் இருப்பது எந்த பூனை என்பது தெரிந்துவிடும்!

கருத்துகள் இல்லை: