சனி, 10 செப்டம்பர், 2011

தமிழ் அரச அதிபர் என்ற ரீதியிலேயே ஜெனீவாவுக்கு நான் அழைக்கப் பட்டிருக்கின்றேன்

யாருக்காகவும் நான் சாட்சி சொல்லப் போவதில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் பயப் பட வேண்டியதில்லை. சாவின் மத்தியில் நின்று பணியாற்றியவள் நான். யாழ் மாவட்டத்தின் மீள் குடியமர்வு அபிவிருத்தி தொடர்பாகவே ஜெனீவா மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பேன். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் தெரிவித்தார்.

ஜெனீவா பயணமாவதற்கு முன்பு நேற்று வவுனியா வந்து திரும்பிய அவர் தனது பயணம் குறித்து உதயனுக்கு விளக்கினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
எமது தமிழ் மக்கள் மீது எனக்கு அக்கறை உண்டு. சாவின் மத்தியில் நின்று நான் பணிபுரிந்தவள். அந்த வேதனை எனக்குத்தெரியும். மக்களுடன் 8 வருடம் பணியாற்றியவள். அதனால் அந்த மக்களுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும்.
30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் நாங்கள் பலவற்றினை இழந்துவிட்டோம். அவற்றை மீளக்கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.தமிழ் அரச அதிபர் என்ற ரீதியிலேயே ஜெனீவாவுக்கு நான் அழைக்கப் பட்டிருக்கின்றேன்.

எனினும் நடந்து முடிந்த போரைப்பற்றி அங்கு சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவ்வாறு சாட்சி சொல்வதற்காகவும் நான் அழைக்கப்படவில்லை. எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு மீள் குடியமர்வும் அபிவிருத்தியுமே. ன்யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியமர்வு மற்றும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் தொடர்பான தகவல் திரட்டியுள்ளேன். இன்னும் செய்யப்பட வேண்டியுள்ள பணிகள் குறித்தும் தகவல்கள் ஜெனீவாவில் தரப்படும்.யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் ஜெனீவாவில் தெரிவிக்கவுள்ளேன் என்றார்

கருத்துகள் இல்லை: