வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அழகிரி, மனைவி, மகனுக்கு மதுரை கலெக்டர் சகாயம் சம்மன்!

மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி மற்றும் மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார்.

மூவரும் வரும் 16ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டி வருகிறார். இதற்காக அப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளார் அழகிரி.

இந் நிலையில் கல்லூரிக்கு அருகில் உள்ள வயல்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி இந்தப் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் எம்.ராமலிங்கம், இது தொடர்பாக கலெக்டர் சகாயத்திடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தயா பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் காரணமாக பாசன கால்வாய்கள் சேதமடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கல்லூரியின் நிறுவனத் தலைவர் மு.க.அழகிரி, அறக்கட்டளையின் உறுப்பினர்கள் காந்தி, துரை தயாநிதி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளார் கலெக்டர் சகாயம்.

அதில், ஏழை விவசாயிகள் இந்த கால்வாய் பாசனத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கால்வாய் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நீர்ப்பாசன பணிகள் சட்டம் 1959 பிரிவு 7ன் கீழ் இது குற்றமாகும். மேலும் இந்த பாசன கால்வாய் மேம்பாட்டுக்கு 38.87 லட்ச ரூபாயும், வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 50.74 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏரிகள் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

தயா அறக்கட்டளை கட்டிய கல்லூரி காரணமாக அரசு செலவழித்த பணம் விரயமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாய பணிகள் சட்டம் 1959 தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன நிர்வாகச் சட்டம் 2000, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை அழகிரி கல்வி அறக்கட்டளை செய்திருக்கிறது.

எனவே இது குறித்து விளக்கம் அளிக்க வரும் 16ம் தேதி காலை 11 மணிக்கு என் முன் ஆஜராகவேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்மன் கடந்த 6ம் தேதியே அழகிரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: