வெள்ளி, 9 செப்டம்பர், 2011

முன்னாள் புலிகளின் 500 பேர் தென்னிலங்கைக்கான 5 நாள் சுற்றுலா

ltte cadres-southவவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் தென்னிலங்கைக்கான 5 நாள் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இன்று மாத்தறையை சென்றடைந்தனர்.

ரயில் மூலம் மாத்தறையை வந்தடைந்த இம்முன்னாள் போராளிகளை வரவேற்கும் நிகழ்வு மாத்தறை சனத்சூரிய விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் சிங்கள மக்களையும் சந்தேகத்துடனேயே நோக்குகின்றமை இல்லாதொழிய வேண்டும் எனக் கூறினார்.

அமைச்சர் அங்கு தொடர்டந்து உரையாற்றுகையில்........"வடக்கில் இது வரை காலமும் இடம்பெற்றது அரசியல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறித்த யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் தமிழ் மக்கள்; சிங்கள மக்களையும் நோக்குவது சந்தேக உணர்வுகளுடனேயே இந்நிலைமை நாட்டில் இல்லாதொழிய வேண்டும் என்பதோடு மக்கள் மனதிலிருந்து நீக்கப்படவும் வேண்டும்.

அதற்காகவே பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கு முன்னாள் போராளிகள் 500 பேர் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பொருட்டு நட்புறவு பயணமாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 வாழ்க்கையிலேயே முதல் தடவையாக புகையிரத வண்டி முதலானவற்றை ஆகியவற்றை முன்னாள் போராளிகள் சிலர் பார்த்துள்ளார்கள். ஏன் இந்த நிலைமை?
எங்கள் நாடு 23 ஆயிரத்து 300 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டது. பேசுவது இரண்டு மொழிகள் மாத்திரமே, 10 மணித்தியாலத்திற்குள் தெய்வேற்திர முனையிலிருந்து பருத்திதுறை வரையிலான பயணத்தை மேற்கொள்ள முடியும். இப்படியான நாட்டில் ஏன் இவ்வாறான ஒரு பிரிவு ஏற்பட்டது?

எனக்கு உங்களது தாய்மொழி பேச முடியாது. உங்களுக்கு எனது தாய்மொழி பேச முடியாது இந்நாட்டில் அப்படி இருக்க முடியுமா?

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமக்குள் காணப்படுகின்ற சந்தேகத்தினை அகற்றுவது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான காரணியாக அமையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாக அமைந்துள்ளது.

இனங்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்துமாறு அமைச்சராகிய எனக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை வரவேற்பதுடன் நாட்டில் இனி ஒரு யுத்தம் ஏற்படாமலிருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்' என்றார்.

கருத்துகள் இல்லை: