வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அழகிரி: பொய் வழங்கு போடும் அதிகாரிகளை நாங்கள் கைது செய்வோம்

திருச்சி & மதுரை: தனக்கு மிக நெருக்கமானவரான 'அட்டாக்' பாண்டியை சந்திக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று திருச்சி சிறைக்கு வந்தார்.
அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று எஸ்ஸார் கோபி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அட்டாக் பாண்டியையும் சந்திக்க அழகிரி திருச்சி சிறைக்கு அழகிரி வந்தார். ஆனால், மத்திய அமைச்சருக்கான புரோட்டோகால் படி வராததால், அவரது காரை போலீஸார் சிறை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவரும் உடன் வந்த மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் நடந்தே சிறை வளாகத்துக்குள் சென்றனர்.
ஆனால், உள்ளே சென்ற அவர்களை எஸ்ஸார் கோபி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பார்க்க மட்டுமே சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை வியாழக்கிழமைகளில் மட்டுமே சிறப்பு சிறப்பு அனுமதி பெற்று சந்திக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து இன்று முறையான அனுமதியுடன் அட்டாக் பாண்டியை சந்திக்க அழகிரி வந்தார். பின்னர் பாண்டியை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த அழகிரியிடம், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதா அரசின் 100 நாள் சாதனையில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். இது திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நடவடிக்கை தொடரும்.

பொய் வழங்கு போடும் அதிகாரிகளை நாங்கள் கைது செய்வோம். பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது நாங்களும் வழக்குப் போட்டு கைது செய்வோம் என்றார்.
முன்னதாக நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க நேற்று மாலை 3.35 மணி அளவில் அழகிரி சிறைக்கு வந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் நெப்போலியன், முதன்மை மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கதுரை ஆகியோரும் வந்திருந்தனர்.
சிறைக்குள் ஜெயிலர் அறையில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, மின்னல்கொடி, எஸ்ஸார் கோபியின் தம்பி ஈஸ்வரன், கவுன்சிலர் மலைச்சாமி, மருத்துவர் நவநீதகிருஷ்ணன், திண்டுக்கல் விஜயன் ஆகியோரை அழகிரி சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அழகிரி கூறியதாவது,
எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மாறாக தைரியமாக சந்தி்ப்போம். திமுகவினர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகள் போட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடருவோம் என்றார்.

கருத்துகள் இல்லை: