வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஆசிரியை ஆபாசமாக திட்டியதால் மாடியில் இருந்து குதித்தார் மாணவி



பல்லடத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் புவனேஸ்வரி (19). கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது புவனேஸ்வரியின் தோழி பாடம் நடத்துவதை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆசிரியை அந்த மாணவியை அவதூறான வார்த்தைகளால் திட்டியதோடு வகுப்பறைக்கு வெளியே நிறுத்திவிட்டார். பின்னர் ஆசிரியை போர்டில் எழுதியதை அழித்துவிட்டு டஸ்டரை உதறியிருக்கிறார்.

அந்த சைகை வெளியே நிற்கும் தனது தோழியை அழைப்பது போல் புவனேஸ்வரிக்கு தோன்றியிருக்கிறது.
உடனே அவர் “மேடம் உன்னை உள்ளே அழைக்கிறார்” என்று கூறியிருக்கிறார். மறு நிமிடமே அந்த மாணவி வகுப்பறை உள்ளே வந்து அமர்ந்தார். வெளியே நிற்கச் சொன்ன மாணவி உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆசிரியை ஆத்திரமடைந்தார். உன்னை உள்ளே வரச்சொன்னது யார்? என்று கேட்டபோது புவனேஸ்வரியை கைகாட்டியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியை ஆசிரியை திட்டியிருக்கிறார். அதோடு வகுப்பறையில் இருந்தும் வெளியே போகச் சொன்னார். மற்ற மாணவிகள் முன்பு நம்மை ஆசிரியை இப்படி திட்டிவிட்டாரே என மனவேதனை அடைந்த புவனேஸ்வரி வகுப்பறை இருந்த 2-வது மாடியில் இருந்து குதித்து விட்டார்.

படுகாயமடைந்த அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவி மாடியில் இருந்து குதித்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆசிரியை திட்டியதால்தான் மாணவி மாடியில் இருந்து குதித்தாரா? என்பது குறித்து விசாரித்தனர்

கருத்துகள் இல்லை: