திங்கள், 22 ஆகஸ்ட், 2011

போராட்டம் என்ற பெயரில் மக்களை வதைப்பதா....? - ரம்யா கோபம்

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நடுச்சாலைகளை ஆக்கிரமிப்பதும், ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்களை செல்லவிடாமல் தடுப்பதும் மிகப்பெரிய தவறு, என நடிகை ரம்யா (திவ்யா) தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடத்தில் முன்னணி நடிகையான ரம்யா இதுகுறித்து கூறியிருப்பதாவது:

நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். ஹெப்பல் மேம்பாலம் அருகே போக்குவரத்து கிட்டத்தட்ட அப்படியே நின்றுவிட்டது. விடுமுறை நாள்தானே ஏன் இப்படி என்று பார்த்தால், 9 பேர் மட்டும் பைக்குகளில் தேசிய கொடியை பறக்கவிட்டபடி ஊர்வலம் செல்கிறார்கள். ஊழலுக்கு எதிரான போராட்டமாம்.

இவர்கள் வேண்டுமென்றே மெதுவாக செல்ல, போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது. விமான நிலையத்துக்கு செல்ல வேண்டியவர்கள் தாமதமாகிவிட்ட டென்ஷனில் தவிக்க, கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் அலறியபடி நின்றது. ஆனால் ஒருவரும் இதுபற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

ஜனநாயகம் என்பது எல்லோருக்கும்தான். மக்களைத் தொல்லைப்படுத்தும் விதத்தில் நடக்கும் போராட்டங்களை அனுமதிக்கவே கூடாது. எங்காவது மைதானத்தில் போய் அமர்ந்து அமைதியாக தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி நடுச் சாலையில் யாரோ நான்குபேர் அழிச்சாட்டியம் செய்ய, அதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதற்குப் பெயர் போராட்டமா... இது கொடுமையானது.
உடனே இதை அன்னா ஹசாரேவுக்கு எதிர்ப்பு, காங்கிரஸ் ஆதரவு என்றெல்லாம் சாயம் பூச சிலர் முயல்வார்கள். அதுபற்றி எனக்கு அக்கறையில்லை. நியாயத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்," என்றார்.

கருத்துகள் இல்லை: