வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு தொடர வருகிறார் ராம்ஜேத்மலானி

சென்னை: தூக்கில் போடும் தேதியை வேலூர் சிறை நிர்வாகம் தங்களிடம் தெரிவித்ததைக் கேட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கான தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்ஜேத்மலானி திங்கள்கிழமை வழக்கு தொடர வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதையடுத்து அவர்களை தூக்கில் போடும் தேதியை வேலூர் சிறை நிர்வாகம் இன்று முடிவு செய்து மூன்று பேரிடமும் தெரிவித்தது.
சிறைக் கண்காணிப்பாளர் இன்று தூக்கிலிடும் தேதியை தெரிவித்தபோது மூன்று பேருமே அதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனராம். இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை திங்கள்கிழமை அவர்கள் நாடவுள்ளனர்.
கருணை மனுவை நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும், தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரவுள்ளனர். இந்த அவசர மனு திங்கள்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகவுள்ளார்.

கருத்துகள் இல்லை: