வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தந்திரமாக பின்வாங்கினேன்’ வெப் டிவியில் கடாபி லிபியாவில் அதிர்ச்சி


திரிபோலி : லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபிக்கு எதிராக பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. இதுவரை அதை ராணுவ உதவியுடன் கடாபி ஒடுக்க முயன்று வந்தார். ஆனால், கடந்த ஞாயிறன்று தலைநகர் திரிபோலியை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதிபர் மாளிகை குண்டு வீசி தரை மட்டமாக்கப்பட்டது. எனினும், கடாபி பிடிபடவில்லை.

அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்துவதாக கிளர்ச்சி படையினர் கூறி வரும் நிலையில், தனது மகன் சைப் அல் இஸ்லாம் நடத்தும் இணைய தள டிவியில் கடாபி திடீரென தோன்றினார். ‘‘எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தந்திரமாகவே தலைநகரில் இருந்து பின்வாங்கியுள்ளேன். எதிரிகளிடம் லிபிய ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். தலைநகர் திரிபோலியை நாங்கள் இன்னும் இழந்து விடவில்லை’’ என்று பேட்டியில் கூறினார்.

இதற்கிடையே, திரிபோலியில் கடந்த சில நாட்களாக நடந்த உச்சக்கட்ட மோதலில் 400 பேர் பலியானதாகவும், 2,000 பேர் வரை காயமடைந்ததாகவும் புரட்சி படையின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்தார். கடாபி பிடிபட்டதும் லிபியாவிலேயே அவர் மீது விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: