ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

பொக்கிஷங்களை மன்னர் கடத்தி சென்று விட்டார் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய

மன்னர் மார்த்தாண்ட வர்மா 

‘பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பலமுறை பொக்கிஷங்களை கடத்தி சென்றுள்ளார்’’ என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘பி’ என்ற கடைசி அறை திறக்கப்படாமல் உள்ளது. இதை திறப்பது மற்றும் 5 அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வது பற்றி  முடிவெடுப்பதற்கு ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கிடையே, மன்னர் குடும்பத்தின் சார்பில் தேவபிசன்னம் பார்க்கப்பட்டது. அதில், கடைசி அறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. மேலும், நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் கொடிய விஷ ஜந்துக்கள் தீண்டி இறப்பார்கள், அவர்களது வம்சம் அழியும் என்றும், திறக்கப்பட்ட அறைகளில் உள்ள நகைகளை மதிப்பிட கூடாது என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடைசி அறையை திறக்க தடை விதிக்கக் கோரி மன்னர் குடும்பம் சார்பில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் ந¤ருபர்களிடம் கூறியதாவது:
 இந்தியாவில் இப்போது மன்னர் ஆட்சி இல்லை. எனவே, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவுக்கு மன்னருக்கு உரிய அந்தஸ்து கிடையாது என்றே உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால்தான், மார்த்தாண்ட வர்மா காலத்தில் இருந்து மன்னர் குடும்பத்தின் கைவசம் உள்ள பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை திறந்து பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தடுப்பதற்காகத்தான் மன்னர் குடும்பத்தின் சார்பில் கோயிலில் தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் பொக்கிஷங்களை பரிசோதிக்கக் கூடாது என்றும், பி அறையை திறந்தால் திறப்பவர்கள் வம்சமே அழியும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தை மிரட்டியுள்ளனர்.
இதற்கு முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் ‘பி’ அறை திறக்கப்பட்டுள்ளது. அப்போது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அறையை திறந்த யாரும் இறக்கவோ, குடும்பம் அழியவோ இல்லை. இப்போது மட்டும் அந்த அறையை திறந்தால் வம்சமே அழியும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ஒரு வாளியில் கோயில் பாயாசம் எடுத்து செல்வார். அதில் பாயாசம் இருப்பதாகத்தான் அனைவரும் கருதுகின்றனர். உண்மையில் அந்த வாளியில் கோயில் பொக்கிஷங்களை எடுத்து சென்றுள்ளார். இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.

கருத்துகள் இல்லை: