ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

சென்னை பெண்ணை எரித்துக்கொன்ற காதலன் - கோயம்பேடு பேருந்துநிலையத்தில் அதிர்ந்த பயணிகள்

வேறு ஒருவருடன் பழக்கம்: சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பெண்ணை எரித்துக்கொன்ற கள்ளக்காதலன் - அதிர்ந்த பயணிகள்

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி(46), கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் பேருந்து நிலையத்திலேயே வேலை செய்து கொண்டு அங்குள்ள நடைமேடையில் தங்கி கொண்டிருந்தார். இவரது  காதலன் முத்து(48). வடபழனி பேருந்து பனிமனையில் துப்புரவு பனியாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாந்தி நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து, தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை திறந்து தனது உடலில் ஊற்றி கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சாந்தியின் உடலின் மீதும் ஊற்றினார். பெட்ரோல் வாசனை அறிந்து சாந்தி எழுந்து பார்க்கும்போது அந்த நபர் தீக்குச்சியை உரசி சாந்தியின் மீதும் தனது உடல் மீதும் பற்ற வைத்துக் கொண்டார்.

இதில் இருவரின் உடலிலும் தீ வேகமாக பரவி இருவரும் அலறியபடி பேருந்து நிலையத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள். இதைக் கண்டதும் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இருவரின் உடலிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணையில் இருவரும் துப்புரவு பணியார்களாக வேலை செய்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சாந்தி, முத்துவிடம் பழகாமல் வேறு ஒவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முத்து பெட்ரோலை வாங்கி வந்து தூங்கி கொண்டிருந்த சாந்தி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தீக்குளித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: